மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம்! மக்களின் நலன் கருதி, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை குறைக்க மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தங்களின் வாழ்வாதாரத்தை காக்க டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், நாட்டு மக்களின் அடுத்த கட்ட தாக்குதலை நடத்தியுள்ளது பாசிச மோடி அரசு. அதாவது, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணி பார்க்க முடியாத நிலைக்கு உயர்த்தியுள்ளது மோடி அரசு. குறிப்பாக, எரிவாயு சிலிண்டர், இம்மாதத்தில் மட்டும் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டிசம்பர் தொடக்கத்தில் ரூ.610-க்கு இருந்த எரிவாயு சிலிண்டர், தற்போது ரூ.710-க்கு, விநியோகம் செய்யப்படுகிறது.

இம்மாதமே இன்னும் முடியாத நிலையில், எரிவாயு சிலிண்டர் விலை மேலும் உயரலாம் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இச்சமயத்தில், பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது மோடி அரசு.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும்,  கலால் வரியை குறைக்காமல்,  பாஜக அரசு உயர்த்தியே வந்துள்ளது. இதன் காரணமாகவே, பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூ. 32.98 ஆகவும், டீசலில் ரூபாய் 31.83 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், பெட்ரோல் விலை  ரூ. 86 ஆகவும், டீசல் விலை ரூ.79 ஆகவும் உயர்ந்துள்ளது.

கடந்த ஆறரை ஆண்டுகளில் மோடி அரசு, ரூ.19 லட்சம் கோடியை கலால் வரியின் மூலம் கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. 2020- ஆம் ஆண்டில் மட்டும், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதன் மூலம் கூடுதலாக ரூ.3 லட்சம் கோடி கிடைத்துள்ளது.
கொரோனா காலத்தில் நாட்டு மக்கள் வேலையின்றி, வருமானத்தை இழந்து வரும்  இந்நேரத்தில், மக்களின் மீது வரி சுமையை உயர்த்தி, கஜானாவை நிரப்புவதில் மட்டுமே மோடி அரசு கவனம் செலுத்தி வருகிறது.
கொரோனா காலத்தை தனது நல்ல வாயப்பாக பயன்படுத்திக்கொண்ட பாசிச மோடி அரசு, விடிந்தால் ஒரு சட்டம், இரவானால் ஒரு சட்டம் கொண்டு வந்து நாட்டு மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நெருக்கடியால் மக்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு,கோடி கணக்கான ரூபாய்களை  நாடாளுமன்றம் கட்டுவதற்கும் பிரதமர் மோடிக்குப் புதிய விமானம் வாங்கவும், நாள்தோறும் விளம்பரச் செலவுக்கும் மோடி அரசு பயன்படுத்த நினைக்கிறது. மோடி அரசுக்கு ஒன்றை நினைவுப்படுத்துகிறேன், உலகத்தில் எந்த இடத்திலும் சர்வாதிகாரம் நிலைத்து நிற்கவில்லை என்பதை உணர வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை, எரிவாயு சிலிண்டர் உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
எனவே, மக்களின் நலன் கருதி, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை குறைக்க மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாருக்கு வழங்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கே கொண்டு வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.