பொலநறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்வு – இரண்டு வான்கதவுகள் திறப்பு
பொலநறுவை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பராக்கிரம சமுத்திரத்தின் ;நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது.
இந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் தற்போது ஒரு லட்சத்து பத்தாயிரம் ஏக்கர் அடி அளவிற்கு உயர்ந்திருப்பதாக பொலநறுவை வலய நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.கே.ஹேவாகம தெரிவித்துள்ளார். இதனால் இரண்டு வான்கதவுகள் இரண்டு அடி உயரம் வரை நேற்றிரவு திறக்கப்பட்டது.
ஒரு வான்கதவின் ஊடாக செக்கனுக்கு 280 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. இதனால் பொலநறுவை கல்லேல்ல பிரதேசம் மற்றும் பொலநறுவை மட்டக்களப்பு பிரதான பாதையில் கல்லேல்ல மன்னம்பிற்றி பிரதேசங்களுக்கு இடையிலான பகுதி என்பன நீரில் மூழ்கும் ஆபத்துக் காணப்படுகின்றது. அம்பன்கங்கையை அண்டிய பகுதியில் உள்ள மக்களும் அவதானமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உல்ஹிற்றிய ரத்கிந்த மகாவலி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. அங்கு நேற்றிரவு ஒரு வான்கதவு திறக்கப்பட்டது. செக்கனுக்கு 11 மீற்றர் கன அடி நீர் உல்ஹிற்றிய ஓயாவிற்கு திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான தொழில்நுட்ப அதிகாரி தீப்த ஜயசேகர தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் மழை பெய்தால் மேலதிக வான்கதவுகளைத் திறக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் உல்ஹிற்றிய ஓயாவின் இருமருங்கலும் வாழ்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை