கோட்டாபய அரசு திருந்தாவிடின் புதிய ஆண்டில் கவிழ்வது உறுதி – சஜித் அணி பகிரங்க எச்சரிக்கை…

“2021ஆம் ஆண்டிலாவது கோட்டாபய அரசு திருந்த வேண்டும். நாட்டை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இந்த அரசு புதிய ஆண்டில் கவிழ்வது உறுதி.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“2021 சுபீட்சமான ஆண்டாக அமையும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறுகின்றார். ஆனால், மக்களுக்கு மூன்று வேளை உண்பதற்குக் கூட உணவு கிடைக்குமா என்பது சந்தேகமாகும்.

கொரோனாத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் உலக நாடுகள் அவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளன. ஆனால், இலங்கையில் கொரோனாப் பாணியை வைத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

வியத்மக அமைப்பிலுள்ள பலருக்கும் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமைக்குள் நாட்டை சுபீட்சமுடையதாக்க முடியுமா? முதலீட்டாளர்கள் எவ்வாறு நாட்டில் நம்பிக்கை வைத்து முதலீடுகளை மேற்கொள்வார்கள்? இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் பலருக்கும் தொழில் வாய்ப்புக்களும் அற்றுப்போயுள்ளன.

இதேபோக்கில் வெளிநாட்டு கொள்கைகளிலும் நாடு முறையற்ற விதத்தில் செல்லுமாயின் எதிர்காலத்தில் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையும் அற்றுப்போகும் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. பொருளாதாரம் இவ்வாறு வீழ்ச்சியடைந்து கொண்டு செல்கின்ற நிலையில் சேனா படைப்புழுவும் விவசாயிகளை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றது.

இவ்வாறான நிலையில், 2021ஆம் ஆண்டிலாவது கோட்டாபய அரசு திருந்த வேண்டும். நாட்டை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இந்த அரசு புதிய ஆண்டில் கவிழ்வது உறுதி” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.