கிழக்கிலுள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் தமது அதிகாரங்களை பயன்படுத்த தடை விதிப்பு!

கிழக்கு மாகாணத்திலுள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் தமக்குரிய அதிகாரங்களை பயன்படுத்த முடியாது என கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவுறுத்தலுக்கு அமையவே இந்த அறிவித்தல் கிழக்கு உள்ளூராட்சி ஆணையாளரினால் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணனினால் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களுக்கு கடிதம் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பின்வரும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் தமக்குரிய அதிகாரங்களை பயன்படுத்த முடியாது:
1.    ஏறாவூர் நகர சபை
2.    அம்பாறை நகர சபை
3.    பொத்துவில் பிரதேச சபை
4.    இறக்கமாம் பிரதேச சபை
5.    பதியத்தலாவ பிரதேச சபை
6.    மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச சபை,
7.    வாகரை பிரதேச சபை,
8.    வாழைச்சேனை பிரதேச சபை
9.    செங்கலடி பிரதேச சபை
10.    சேருவில பிரதேச சபை
11.    தம்பலகாமம் பிரதேச சபை
12.    திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை
13.    மொரவேவ பிரதேச சபை

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மேற்குறிப்பிட்ட சபைகளில் 2021ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை சமர்பித்து சபை அங்கீகாரம் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் நிலமை அத்துடன்  உரிய சபைகளது தவிசாளர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் நகர சபைக் கட்டளைச்சட்டம் 184 (1A) மற்றும் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவிற்கு அமைவாக  விசாரணை மேற்கொள்வதற்காக ஆளுநரினால் விசேட வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.

அதுவரை மேற்குறிப்பிட்ட  உள்ளூராட்சி மன்றங்களில் சபை அமர்வுகளை நடாத்தாமல் இருப்பதுடன் தவிசாளர் தனது அதிகாரங்களை பயன்படுத்துவதில் இருந்து தவிர்ந்து இருக்குமாறும் குறித்த காலத்திற்குள் எந்தவித மூலதன வேலைத்திட்டங்களையோ, இலவச  விநியோகங்களையோ மேற்கொள்ளாதிருப்பதனை உறுதிப்படுத்துமாறும்” குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.