மாநகர சபைகள், நகர சபைகள் கட்டளை சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை விரைவுபடுத்த பிரதமர் அறிவுறுத்தல்

மாநகர சபைகள், நகர சபைகள் கட்டளை சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை விரைவுபடுத்துமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (15) முற்பகல் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே பிரதமர் இதனை வலியுறுத்தினார்.
அதற்கமைய குறித்த திருத்தங்களை மேற்கொள்ள தயாராகவிருப்பதாகவும், அதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஒரு சில தினங்களில் சமர்ப்பிப்பதாகவும் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்கள் உறுதியளித்தார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை, ஊதிய ஆணைக்குழு, நிர்வாக சேவைகள் திணைக்களம், விலைமதிப்பு திணைக்களம் ஆகியவற்றுடனான சிக்கல்கள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் இச்சந்திப்பின்போது பிரதமருக்கு விளக்கமளித்தனர்.

கொவிட் -19 நிலைமை காரணமாக உள்ளூராட்சி மன்றங்களின் வருவாய் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், இந்நிறுவனங்களில் ஊழியர் பற்றாக்குறை பல நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும் மொரட்டுவ மாநகர சபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள முடியும் என்றும், அதிகாரத்தை பொறுப்பேற்கும் முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அந்த மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும் என்றும் கௌரவ பிரதமர் நினைவுபடுத்தினார்.

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால்  நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையகப்படுத்தப்பட்ட அதிகாரங்கள்  பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் சுமார் 90 சதவீதம மீண்டும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த சந்திப்பில் வெளிப்படுத்தப்பட்டது.
அத்துடன், அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு திட்டங்களை செயல்படுத்தும் போது கட்டாயமாக அந்நிறுவனத்தின் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட வேண்டும் என  பிரதமர் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தினார்.

அதற்கமைய மார்ச் 1ஆம் திகதி முதல் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ கூட்டங்களுக்கு உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என நகர அபிவிருத்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம எம்.ஜீ.கே.ரணவீர அவர்கள் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகளைத் திட்டமிடும்போது பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உட்படாத வகையில் அவர்களின் வசதிக்கேற்ப அதனை திட்டமிடுமாறு அனைத்து உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கும் கௌரவ பிரதமர் அறிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களில் மதிப்பீட்டு அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு  பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தார். அதற்கமைய, புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 263 மதிப்பீட்டு அதிகாரிகளை கொண்டு இந்த வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு மதிப்பீட்டுத் திணைக்களத்தின் தலைமை மதிப்பீட்டாளர் திருமதி பி.பி.டீ.எஸ்.முத்துகுமாரன தெரிவித்தார்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் நடவடிக்கை காரணமாக இடம்பெற்ற தவறான நடத்தை பற்றி கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

குறித்த சந்திப்பில் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ண, உள்ளூராட்சி ஆணையாளர்கள், மேயர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.