வெளிநாட்டு பணவிவகாரம் வவுனியாவில் 6 பேர் கைது!

வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சிலர் தாம் மத்திய வங்கியில் இருந்து கதைப்பதாக தெரிவித்ததுடன், அவரது வங்கிக்கணக்கில் பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் அமெரிக்க நாட்டிலிருந்து வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதனை வெளியில் எடுப்பதற்கு உதவி செய்வதாகவும் தெரிவித்து, 7500 கோடியை தங்களுக்கு தருமாறும் 2500 கோடியை குறித்த இளைஞருக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக அந்த இளைஞரும் கடந்த வருடம் 6ஆம் மாதத்திலிருந்து அந்த குழுவினருடன் இணைந்து கொழும்பில் தங்கி வந்துள்ளார்.

இதேவேளை அவரது வங்கி கணக்கில் ஒரு இலட்சம் கோடி இலங்கை ரூபாய் வைப்பில் இடப்பட்டுள்ளதாக அந்த குழு கொழும்பில் வைத்து இளைஞரிடம் தெரிவித்துள்ளது. எனினும் பணம் எடுக்கமுடியாத நிலையில் மீண்டும் அவர் வவுனியாவிற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் நேற்றையதினம் குறித்த இளைஞரை மீண்டும் தொடர்பு கொண்ட அந்த குழுவினர் பணத்தை மீட்பதற்காக கொழும்பு செல்வதாக தெரிவித்து அவரை வாகனம் ஒன்றில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர். எனினும் குறித்த இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் இளைஞனின் நண்பன் வழங்கிய தகவலிற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரிற்கு குறித்த விடயம் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸார் அந்த குழுவினரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் குறித்த இளைஞனிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளதுடன், இது தொடர்பாக மத்திய வங்கிக்கும் தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட 6 நபர்களும் கொழும்பு, அவிசாவளை, குருநாகல் மற்றும் வவுனியா போன்ற பகுதிகளை வசிப்பிடமாக கொண்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய மூன்று சொகுசு வாகனங்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்தால் அவரை கடத்திச் செல்லும் நோக்குடன் அந்த குழு வந்திருக்கலாம் என பொலிஸ் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.