குருந்தூரில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு சிங்கள இலக்கியங்களே சாட்சி – யாழ். பல்கலை பேராசிரியர்

குருந்தூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு என யாழ். பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஸ்ட பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ள அவர், “வன்னிப் பிரதேசத்தில் உள்ள வரலாற்று பழமை வாய்ந்த முக்கிய வரலாற்று மையங்களில் குருந்தலூர் ( குருந்தூர்) ஒன்றாகும். பாலி இலக்கியங்களில் இவ்விடம் குருந்தகம என்றும் தமிழில் இது குருந்தலூர் என்றும் அழைக்கப்படுகின்றது.

இந்த குருந்தலூர் என்பதே தொன்மைமையான தமிழ் இடப்பெயர் என்பது ஒரு தொன்மையான ஆதாரமாக காணப்படுகின்றது

இந்த குருந்தலூரில் பௌத்த மதம் பரவுவதற்கு முன்னர் குருந்தலூர் (குருந்தூர்) அதன் சுற்றாடலிலும் ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால பண்பாட்டு இருந்துள்ளது. ஆகவே அந்தப் பண்பாட்டு மக்களில் ஒரு பிரிவினர் பௌத்த மதம் பரவிய பொழுது அந்த மதத்தையும் தழுவியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

இந்த குருந்தலூர் 13 ஆம் நூற்றாண்டில் கலிங்கமாகன் சாகவனுடைய ஆட்சியில் மிக முக்கிய ஒரு நகராக இருந்ததை சூலவம்சமும் இராஜாவெலிய என்ற சிங்க இலக்கியமும் குறிப்பிடுகின்றது.

இந்த இடத்தில் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட லூயிஸ் வன்னிக் கையேடு என்று நூலில், தான் அந்த இடத்துக்கு சென்ற பொழுது அங்கே பௌத்த கட்டட எச்சங்களோடு இந்து ஆலயத்தின் எச்சங்களையும் கண்டதாகக் குறிப்பிடுகிறார்.

அதிலேயே நந்தியோடு உடைந்த நந்தியும் அதனோடு இணைந்த கட்டட அழிபாடுகளையும் தான் கண்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

1870இல் போல் என்பவர் தான் இந்த இடத்துக்குச் சென்றபொழுது பௌத்த கட்டட எச்சங்களுடன் தமிழ் கல்வெட்டுடன் கூடிய இந்து ஆலயங்களின் வழிபாடுகளையும் கண்டதாகக் குறிப்பிடுகிறார். ஆகவே இந்த குருந்தலூர் என்பது பௌத்த இந்து ஆலயங்கள் தோன்றி வளர்ந்த இடங்களாக காணப்படுகின்றன.

எனவே இந்த குருந்தலூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு.

ஆகவே இந்த குருந்தலூர் அகழ்வாய்வில் கிடைக்கும் தொல்பொருள் சான்றுகளை வைத்துக்கொண்டுதான் அது பாலி சிங்கள இலக்கியங்கள் கூறுகின்ற உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தலாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.