30 வருட யுத்தத்தில் பாகிஸ்தானுக்கும் பங்குண்டு பிரதமர் இம்ரான் கான் கருத்து!

இலங்கையில் 30 வருட காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதை நினைவுபடுத்துவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றானது உலகில் நிலவும் சமத்துவமின்மையை நன்கு வெளிக்காட்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அவர், நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னர், இணை ஊடக சந்திப்பொன்றை நடத்தியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

பிரதமர் இம்ரான் கான் உரையாற்றுகையில், “நான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியவுடனேயே ஒரு கிரிக்கட் வீரனாக இலங்கைக்கு வந்தேன். நான் எனது கிரிக்கட் வாழ்க்கையை ஆரம்பித்திருந்த போது இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்திருந்தார்.

அன்றிலிருந்து இலங்கை தொடர்பான சிறந்த நினைவுகளை நான் கொண்டிருக்கிறேன். டெஸ்ட் அந்தஸ்தற்ற நிலையிலிருந்து உலகக் கிண்ணத்தை வென்றது வரை இலங்கை கிரிக்கட் அணி வளர்ச்சியடைந்து வந்ததை நாம் பார்த்திருக்கிறோம். உலகக் கிண்ணத்தைக் கூட இலங்கை அணி பாகிஸ்தானில் வைத்தே வென்றது. நானும் எனது கிரிக்கட் அணியினரும் இலங்கை கிரிக்கட் அணியின் பரிணாம வளர்ச்சியைக் கண்டிருக்கிறோம்.

எமது துணைக் கண்டத்தைச் சேர்ந்த நாடு என்ற வகையில் இலங்கை அணி ஓர் உலகத்தரம் வாய்ந்த அணியாக வளர்ச்சியடைந்ததைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைந்தோம். இந்த விஜயம் வரைக்குமான இலங்கையுடனான எனது உறவை நினைவூட்டவே இந்த விடயங்களை இங்கு குறிப்பிடுகிறேன்.

இந்த விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். பாகிஸ்தான் சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் ஓர் அங்கமாக உள்ளது. சீன- பாகிஸ்தான் பொருளாதார நடைபாதை வேலைத்திட்டமும் முதன்மையானதாகும். நாடுகளுக்கிடையிலான தொடர்புகள் மிக முக்கியமானதாகும். எனவேதான், நான் எனது தூதுக்குழுவிடம் இலங்கைக்கு பாகிஸ்தானுக்குமிடையிலான தொடர்புகளை மேலும் முன்னேற்றுவதற்கான வழிவகைகளைக் கண்டறியுமாறு கேட்டிருக்கிறேன்.

சீன – பாகிஸ்தான் பொருளாதார நடைபாதை வேலைத்திட்டமானது மத்திய ஆசியாவுக்கும் இலங்கைக்கும் முக்கியமானதாகும். எதிர்காலத்தில் மத்திய ஆசியாவுடனான பாகிஸ்தானின் தொடர்பு மூலம் மேலும் இலங்கை எவ்வாறு பயனடையலாம் என்பது பற்றி நாம் ஆராய்ந்திருக்கிறோம். எமது வர்த்தக உறவுகள் மூலம் இரு நாடுகளும் மேலும் ஒன்றுபட முடியும். மேலும் நெருக்கமடைய முடியும்.

எமது இரு நாடுகளும் பயங்கரவாதம் எனும் பொதுவான பிரச்சினைக்கு முகங்கொடுத்த நாடுகளாகக் காணப்படுகின்றன. மிக மோசமான பயங்கரவாதத்திற்கு 10 ஆண்டுகளாக பாகிஸ்தான் முகங்கொடுத்தது. இதனால், 70 ஆயிரம் உயிர்களை நாம் இழந்தோம்.

அதேபோன்று இலங்கையும் 30 வருட காலம் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடியது. இலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதை இந்த இடத்தில் நினைவுபடுத்துகிறேன்.

சுற்றுலாத்துறையின் மீது தங்கியுள்ள இலங்கையின் அபிவிருத்தி இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. பயங்கரவாதம் உள்ள ஒரு நாட்டினால் முன்னேற்றமடைய முடியாது. பயங்கரவாதம் உள்ள ஒரு நாட்டில் முதலீடுகளைச் செய்ய முடியாது. பாகிஸ்தானில் பயங்கரவாதம் தலைவிரித்தாடிய 10 ஆண்டுகளில் சுற்றுலாத்துறையே இருக்கவில்லை. எந்தவிதமான முதலீடுகளும் பாகிஸ்தானுக்கு கிடைக்கவில்லை.

தற்போது கொரோனா வைரஸ் நெருக்கடி வறிய நாடுகளையும் அவற்றில் வாழுகின்ற வறிய மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதை அபிவிருத்தியடைந்த நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். வறுமையான நாடுகள் எவ்வாறு கடன் நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றியும் நாம் கலந்துரையாடினோம். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாகிஸ்தான் தனது வரலாற்றிலேயே 8 பில்லியன் டொலர் பெறுமதியான மிகப் பெரிய நிவாரண உதவித்திட்டத்தை அமுல்படுத்தியது.

கொரோனா வைரஸ் தொற்றானது உலகில் நிலவும் சமத்துவமின்மையை நன்கு வெளிக்காட்டியுள்ளது. இதனால்தான் ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக நிறுவனங்கள் கொரோனா வைரஸினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இவ்வாறான நாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.