யாழ். பல்கலை பட்டமளிப்பு: அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த விருது பெறுகிறார் மாணவி துலாபரணி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இவ்வாண்டு செல்வி முனியப்பன் துலாபரணிக்கு வழங்கப்படுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா இன்றும் (புதன்கிழமை) மற்றும் நாளையும் நடைபெறுகின்றது.

இந்நிலையில், இன்று நடைபெறும் அமர்வின் போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்திபெற்ற மாணவியான மாத்தளை மாவட்டத்தின் சுதுகங்கை எனும் ஊரைச் சேர்ந்த செல்வி முனியப்பன் துலாபரணிக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக்கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஆவணி முதலாம் திகதி அதிகாலை ஐந்து மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நிலக்சனது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ். இந்துக்கல்லூரியில் ஒன்றாய்க் கற்ற 2004 உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் நிலா நிதியமானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின்போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தை அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இந்த நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர், யாழ். பல்கலைகழகத்திடம் நிதி கையளிக்கப்பட்டது.

இதன்மூலம், அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விருதை கடந்த ஆண்டு யாழ்ப்பாணம் உடுவிலைச்சேர்ந்த மாணவியான செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமாரும் முன்னைய ஆண்டு யாழ்ப்பாணம் கோண்டாவில் குமரகோட்டத்தைச் சேர்ந்த யாழ் பல்கலை மாணவியான தினேஸ் விஜயதர்சினியும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.