கல்முனை மாநகரசபை வாகனத்தில் வந்த முதல்வரின் மகன்: வீடியோ எடுத்தவர் மீது தாக்குதல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் செயற்பாட்டாளர் இஸட்.ஏ. நௌசாத் தாக்குதலுக்குள்ளாகி கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த அவர் மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள அல்டிமேட் சப்பாத்து கடைக்கு தான் தனது சொந்த வேலை நிமிர்த்தம் சென்றிருந்த போது அப்பிரதேசத்தில் கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான வாகனத்தில் கல்முனை மாநகர முதல்வரின் மகனும் அவரது நண்பர்களும் வந்தார்கள். அவர்கள் சட்டத்திற்கு முரணாக கடந்த காலங்களிலிருந்து தொடர்ந்தும் அந்த வாகனத்தை பயன்படுத்திவருவதை அவதானித்த நான் கல்முனை மாநகர சபை நிர்வாகத்திடம் முறையிட்டு மக்கள் சொத்தை காப்பாற்றும் நோக்கில் அந்த சம்பவத்தை என்னுடைய தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்து கொண்டேன்.
அப்போது வாகனத்தில் இருந்து இறங்கி வந்த கல்முனை மாநகர முதல்வரின் மகன் என்னுடன் முரண்பட்டார். அதன் பின்னர் வாகனத்திற்கு திரும்பி சென்று வாகனத்தின் உள்ளே இருந்த அவரது நண்பர்களை அழைத்துவந்து எனக்கு தகாத சொற்களை கொண்டு ஏசிவிட்டு என்னை தாக்கினர். அதன் பின்னர் என்னுடைய தொலைபேசியையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர். இந்த சம்பவம் நேற்றுமாலை 05.00 மணியளவில் நடந்தது. நான் உடனடியாக செயற்பட்டு அவசர பொலிஸாரை உதவிக்கு 05.06 மணியளவில் அழைத்தேன். அங்குவந்த கல்முனை பொலிஸார் என்னுடைய வாக்குமூலத்தை பெற்றுச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவங்கள் எல்லாம் அந்த கடைக்கு அண்மையில் உள்ள ஜனா கம்யூட்டர் எனும் கடையில் பொருத்தப்பட்டுள்ள கமராவில் பதிவாகியிருக்க வாய்ப்புள்ளது. அங்கு சென்று கல்முனை முதல்வரின் மகன் அந்த ஒளிப்பதிவை அழித்துவிடுமாறு அந்த கடை உரிமையாளரை வற்புறுத்தி கொண்டிருந்ததை நான் அவதானித்தேன்.
எனக்கு நெஞ்சில் அதிக வலி இருந்தது, மூச்சி விடுவதில் சிக்கல் இருந்ததாலும் வைத்திய ஆலோசனைக்கு இணங்க நான் இப்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறேன். மக்களின் வரிப்பணத்தையும், அரச சொத்தையும் வீணாக பயன்படுத்திக்கொண்டிருக்கும் இவர்களின் அதிகார துஸ்பிரயோகத்தை தட்டிக்கேட்ட என்னை இவர்கள் தாக்கியுள்ளார்கள். இதனை கண்டு நான் அஞ்சப்போவதில்லை. இனியும் என்னுடைய சமூக தொண்டு தொடரும். இவர்களினால் எனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக உணர்கிறேன். இவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக தனது பணியை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது தொடர்பில் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் முதல் அரச உயர்மட்டத்தில் பலருக்கும் நான் தெரியப்படுத்தியுள்ளேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.