வெல்லாவெளியில் துவிச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் துவிச்சக்ர வண்டி விபத்தில் பிரதேசவாசி ஒருவர் மரணமடைந்துள்ளதாக வெல்லாளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தும்பங்கேணி, சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த கனகரெத்தினம் கிருபைநாயகம் 64 வயது என்பவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது, களுவாஞ்சிகுடியிலுள்ள தனது உறவினர் வீட்டிலிருந்து புதன்கிழமை இரவு தும்பங்கேணி, சுரவணையடியூற்றிலுள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருக்கையில் வீதியில் விழுந்து வீதியின் ஓரத்தில் நீர் குழாய் பதிப்பதற்காக வெட்டப்பட்டிருந்த குழிக்குள் விழுந்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில், களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவில் சம்பவ இடத்துக்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.