சொந்த மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு 10 வருட கடுழீய சிறைத்தண்டனை!

திருகோணமலையில் சொந்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி குழந்தை பிரசவித்திற்கு காரணமாக இருந்த தந்தைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதியரசர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று (30) தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த சம்பவம் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் நடைப்பெற்றதாகவும், கர்ப்பம் தரித்த பின்னரே இவ்விடயம் பொலிஸ் முறைப்பாட்டிற்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையின் போது கர்ப்பமடைந்துள்ளமை தெரியவந்துள்ளதாக வைத்திய கலாநிதி நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

சந்தேகநபரான தனது தந்தை தன்னிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாகவும், இதன் காரணமாகவே தனக்கு இந்நிலை ஏற்பட்டதாகவும் சிறுமி நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் சாட்சியத்தின் பின்னர் மன்றில் ஆஜராகாது தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் சந்தேகநபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 5 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்குமாறும் இதனை வழங்க தவறும் பட்சத்தில் மேலும் 2 வருடம் சிறைத்தண்டனை வழங்கப்படுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் கைது செய்யுமாறு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், பகிரங்க பிடிவிராந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.