மல்வத்து ஓயா பல்நோக்கு நீர்ப்பாசன வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் ‘நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை’ எனும் தூரநோக்கு மிக்க கொள்கைப் பிரகடனத்தை யதார்த்தமாக்கும் வகையில் அநுராதபுரம் மாவட்டத்தில் அமையப்பெறவிருக்கும் ‘மல்வத்து ஓயா பல்நோக்கு நீர்பாசன திட்டத்தின்’ ஆரம்ப நிகழ்வு அநுராதபுரம் தந்திரிமலை, போகொட பகுதியில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ அவர்களினால் மல்வத்து ஓயா பல்நோக்கு திட்டத்தின் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த மல்வத்து ஓயா நீர்ப்பாசன திட்டமானது சுமார் மூவாயிரத்து 246 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. குறித்த நீர்ப்பாசன திட்டத்திற்கான நீர்தேக்கத்தின் 70 வீதமான பரப்பு அநுராதபுர மாவட்டத்திலும், அதன் கீழ் பகுதி வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்திலும் விழுகின்றன.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் 30,700 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரைப்பெறும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டுக்கரைக் குளம் மற்றும் அகத்தி முறிப்பு குளம் ஆகியவற்றை அண்மித்து காணப்படுகின்ற விவசாய நிலங்கள் செழிப்படைவதுடன், விவசாய உற்பத்தியும் தன்னிறைவு அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், மல்வத்து ஓயா பல்நோக்கு திட்டத்தின் கீழ் சுமார் 4.7 ஜிகா வோட்ஸ் மின்சாரம் உற்பத்திக்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையின் 5 வது பாரிய நீர்பாசன திட்டமாக விளங்கவுள்ள இத்திட்டத்தின் மூலம் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் செழிப்படைவதுடன் விவசாயிகளின் நீண்ட நாள் கனவு நனவாகும் வகையில், விவசாய உற்பத்தி, நன்னீர் மீன்வளர்ப்பு, தொழில் வாய்ப்புக்கள், உள்ளக வீதி புனரமைப்பு, விவசாய உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு, கால்நடைகளுக்கு சாதகமான சூழல் என்பன மேம்படுத்தப்படுகின்றன. அத்துடன் சுற்றுலா துறையும் விருத்தியடையும் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த ஆரம்ப நிகழ்விற்கு காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, இராஜாங்க அமைச்சர்களான அநுராத ஜயரத்ன, செஹான் சமரசிங்க, துமிந்த திசாநாயக்க, ஸ்ரீபால கம்லத், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான  செல்வம் அடைக்கலநாதன்,  சார்ள்ஸ் நிர்மலநாதன், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.