ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் காரொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்து!
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதி, செனன் பகுதியில், நேற்று (04) இரவு, காரொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காரின் சாரதி உட்பட காரில் பயணித்த நால்வர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
நுவரெலியா வசந்த காலத்தைப் பார்வையிடுவதற்காக, காரில் வந்த மேற்படிக் குழுவினர், மீண்டும் ஹொரண பகுதிக்குச் சென்றபோதே, விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
காரின் சாரதி உட்பட் நால்வரும் மதுபோதையில் இருந்துள்ளனர் என்றும் ஏனைய வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், நடுவீதியில் காரை செலுத்திச் சென்றுள்ளனர் என்றும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஏனைய வாகனங்களின் சாரதிக்கும் குறித்த காரின் சாரதிக்கும் இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே, காரானது செனன் பகுதியில், குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, காரின் சாரதி உட்பட நால்வரும் தலைமறைவாகியிருந்தனர் என்றும் அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை