கூட்டத்தொடர் ஆரம்ப நாளிலேயே இலங்கைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மனித உரிமை ஆணையாளர் கருத்து!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் இன்று  ஜெனீவாவில் ஆரம்பமாகிய இந்நிலையில் இலங்கை குறித்து முதல் நாளிலேயே கடும் அதிர்ச்சி வெளியிடப்பட்டுள்ளது

இலங்கையில் கடந்த மாதம் 30ஆம் திகதி அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மற்றும் அதனை அடுத்து இடம்பெறும் இராணுவத் தலையீடுகள் சிவில் பிரஜைகளின் அச்சம் உடைய நிலைமை தொடர்பில் இந்த கூட்டத்தின்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மரணதண்டனை கைதி துமிந்த சில்வா விடுதலை, 11 மாணவர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

மேலும் மனித உரிமைகள் தொடர்பாக போதுமான முன்னேற்றத்தை இலங்கை உறுதி செய்ய தவறியமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கவலை வெளியிட்டுளார்.

இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மற்றும் இராணுவமயமாக்கல் குறித்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அத்தோடு காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சட்டத்தரணி உள்ளிட்ட பலர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து சுட்டிக்காட்டிய அவர், உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கான செயற்பாடுகள் குறித்து உறுப்பு நாடுகள் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.