விசேட தேவையுடைய 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் கௌரவ பிரதமரின் பாரியாரின் தலைமையில் ஆரம்பம்…

விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நாடளாவிய வேலைத்திட்டம் கொழும்பு றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கௌரவ பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (24) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.

விசேட தேவையுடைய பிள்ளைகள் மற்றும் நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கி கொவிட்-19 தொற்றினால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் மற்றும் மரண விகிதத்தை குறைக்கும் நோக்கில் 12 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட பிள்ளைகளுக்கு ஃபைஸர் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

கொழும்பு, குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் உள்ள விசேட தேவையுடைய பிள்ளைகள் மற்றும் நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்ட பிள்ளைகள் ஆகியோருக்கு இதன்போது தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வேலைத்திட்டம் எதிர்வரும் வாரம் முதல் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும்.

விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்கும் போது சிறுவர் வைத்திய நிபுணர்களின் அனுமதியும், முழுமையான மேற்பார்வையும் சுகாதார அமைச்சினால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள்,

குறிப்பாக 12 முதல் 19 வயதுடைய பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வைத்தியர்கள், சுகாதார மற்றும் கல்வித் துறையின் அறிவுறுத்தல்களுக்கமைய விசேட தேவையுடைய பிள்ளைகள் மற்றும் நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படுகிறது.

இவ்வாறான குழந்தைகள் அதிகமாக காணப்படும் குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் இந்த தடுப்பூசி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இதற்கு முன்னதாக அறிவுறுத்தினார்.
அதற்கமைய சிறுவர் வைத்தியசாலையான றிட்ஜ்வே வைத்தியசாலையில் இன்று குறியீட்டு ரீதியாக இந்த தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

விசேட தேவையுடை மற்றும் நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு எதிர்காலத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் ஃபைஸர் தடுப்பூசி வழங்குவதற்கு நாம் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல்ல அவர்கள் தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்சய முணசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, சிறுவர் வைத்திய நிபுணர்களின் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாமன் ரஜிந்திரஜித், சிறுவர் வைத்திய நிபுணர்களின் நிறுவனத்தின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.