தோட்ட சேவையாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தலவாக்கலையில் போராட்டம்…

(க.கிஷாந்தன்)

தோட்ட சேவையாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான தலவாக்கலை தோட்ட சேவையாளர்கள் இன்று (29.09.2021) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், தலவாக்கலை தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கையிலும் இறங்கினர்.

எதிர்ப்பு வசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு தோட்ட சேவையாளர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தோட்ட தொழிலாளர்களுக்கும், தோட்ட சேவையாளர்களுக்கும் இடையில் நேற்று (28.09.2021) ஏற்பட்ட வாக்குவாதம், இறுதியில் மோதல் வரை சென்றுள்ளது.

இதன்போது ஏற்பட்ட கைகலப்பினால் தோட்ட சேவையாளர்கள் இருவரும், தோட்ட தொழிலாளர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது லிந்துலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தோட்ட உதவி முகாமையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியே கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் ஒன்பது தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை நுவரெலியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.