தமிழர்களுக்கு ஒரு தீர்வு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நல்லாட்சி கலைக்கப்பட்டது… (முன்னாள் பா.உ – ஞா.ஸ்ரீநேசன்)

நல்லாட்சியில் ஊடகவியலாளர்கள் எவரையும் விமர்சிக்கக் கூடிய நிலைமைகள் காணப்பட்டது. அன்று ஒரு ஜனநாயக சூழல் காணப்பட்டது. அதற்கு மேலாக கடந்த ஆட்சிக் காலத்தில் பேச்சுவார்த்தை மூலமாக ஒரு நகல் அரசியற்திட்டம் வரையப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்தும் செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ அந்த ஆட்சியைக் கவிழ்த்து சதிப்புரட்சியொன்றை ஏற்படுத்தினார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறுமனெ முட்டுக் கொடுத்தது எதுவுமே செய்யவில்லை என இராஜாங்க அமைச்சர் அங்குமிங்கும் பேசுவதாக அறியக் கிடைத்தது.

என்னைப் பொறுத்தவரையில் கடந்த ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் பாரிய முரண்பாடு காணப்படுகின்றது. கடந்த ஆட்சியின் போது சுமார் 90க்கும் மேற்பட்ட இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு மக்களின் காணி ஒப்படைக்கப்பட்டது. சிறையில் இருந்த 217 அரசியற் கைதிகளில் ஏதோவொரு வகையில் பலரை விடுவித்து இறுதியில் 87 கைதிகளே மிகுதியாக இருந்தார்கள். தொல்லியல் என்று சொல்லி காணிகளை ஆக்கிரமிக்கும் சேட்டைகள் இருக்கவில்லை. தற்போதிருக்கின்ற ஆளுநர் சிங்கள மக்களைக் குடியேற்றுகின்ற அதிகாரி போன்று செயற்பட்டு மயிலத்தமடு, மாதவணை, கெவிலியாமடு போன்ற பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை அமைப்பது போன்ற செயற்பாடுகள் இடம்பெறவில்லை. ஊடக சுதந்திரம் ஒழுங்கான முறையில் பேணப்பட்டது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்றில்லாமல் ஊடகவியலாளர்கள் எவரையும் விமர்சிக்கக் கூடிய நிலைமைகள் காணப்பட்டது. ஊடகவியலாளர்களை அச்சுறுத்துகின்ற தன்மைகள் காணப்படவில்லை. அன்று ஒரு ஜனநாயக சூழல் காணப்பட்டது.

இன்று அவையெல்லாம் தலைகீழாக இருக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் இன்று ஒரு குடிமகனுக்குரிய கடன்சுமை சுமார் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி வற்றிப் போயிருக்கின்றது. கப்பல்களில் கொண்டு வந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்குக் கூட அந்நியச் செலாவணி இல்லாத நிலை காணப்படுகின்றது.

கடந்த ஆட்சிக் காலத்தில் பேச்சுவார்த்தை மூலமாக ஒரு நகல் அரசியற்திட்டம் வரையப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்தும் செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ அந்த ஆட்சியைக் கவிழ்த்து சதிப்புரட்சியொன்றை ஏற்படுத்தினார். அவர்  இதற்குக் கூறிய ஒரு விடயம். தான் சத்தமில்லாமல் இருந்திருந்தால் பிரபாகரன் ஆயுதத்தால் சாதிக்காததை சம்பந்தன் அவர்கள் பேச்சுவார்த்தை மூலமாகச் சாதித்திருப்பார் என்ற தெரிவித்திருந்தார்.

தமிழர்களுக்கு ஒரு தீர்வு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நல்லாட்சி கலைக்கப்பட்டது. இதனை இராஜாங்க அமைச்சர் போன்ற தம்பிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அந்தத் தம்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் போது உச்சமாகத் தமிழ்த் தேசியத்தை உச்சரித்துக் கொண்டவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து யாராவது கட்சி மாறிச் சென்றால் அவர்கள் படுதுரோகிகளாகவே இருப்பார்கள் என்று சொன்னவர் தற்போது வடமோடி, தென்மோடி, இன்னுமொரு மேடி என தாளத்திற்குக் கூத்தாடுவது போன்று ஆடுகின்றார்.

கடந்த தேர்தல் மாத்திரம் ஒழுங்கான முறையில் நடந்திருந்தால் யார் யார் வென்றிருப்பார்கள், யார் தோற்றிருப்பார்கள் என்று தெரிந்திருக்கும். கடந்த தேர்தலில் மோசடியாக வென்றவர்கள் இன்று மற்றவர்களை நிராகரிக்கப்பட்டவர்கள் என்று வியாக்கியானம் சொல்லிக் கொண்டிக்கின்றார்கள்.

கடந்த ஆட்சியிலிருந்து பார்க்கும் போது தற்போது ஜனநாயகம் தலைகீழாக மாற்றப்பட்டிருக்கின்றது. இராணுவ ஆட்சி ஏற்படக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக யாராவது கதைத்தால் அவர்களை அச்சுறுத்தல் விடுக்கின்ற நிலை காணப்படுகின்றது.

தற்போது படுமோசமான கொலைக் குற்றச்சாட்டுடையவர்கள் கூட பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், தமிழ் அரசியற் கைதிகள் சிறையில் வாடுகின்றார்கள். ஆனாலும் பதின்நான்கு கைதிகளை விடுவித்திருக்கின்றார்கள். அவர்கள் யார் இன்னும் சில காலங்களில் தங்கள் சிறைக்காலம் முடியவுள்ளவர்கள். அவர்கள் தான் விடுதலை செய்யப்பட்டார்களே தவிர உண்மையில் நீண்ட காலமாக சிறையில் இருக்கின்றவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. அதுவும் ஜி.எஸ்.பி வரிச்சலுகைக்கான நாடகமாகவே இருக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் விளங்கிக் கொள்ளாமல் நுனிப்புல் கடிக்கின்ற அரசியலைச் செய்து கொண்டிருக்கக் கூடாது. வாய்க்கு வந்ததையெல்லாம் திட்டித் தீர்த்தால் அதுதான் அரசியல் என்று நினைக்கக் கூடாது. ஆறு கடக்கும் முன் அண்ணன் தம்பி ஆறு கடந்தால் நீ யார் நான் யார் என்கிற அர்ப்பத்தனமான இந்த அரசியல் நிலைக்காது.

ஆட்சியேறியதும், ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு என்ற சொல்லியிருந்தார்கள். அதற்கு என்ன நடந்திருக்கின்றது? எத்தனை பேருக்கு தொழில்வாய்ப்புக் கொடுக்கப்பட்டது? இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டது. அந்த விண்ணப்பத்திற்கு என்ன நடந்திருக்கின்றது? கொடுத்த தொழிவாய்ப்புகளைப் பார்த்தால் உண்மையில் தொழில் வாய்ப்புக்குத் தகுதியுள்ளவர்கள் பலர் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள்.

தற்போது கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் மண் பேமிட் எடுத்துக் கொடுப்பதும், கிழக்கு மாகாணத்து மண்ணை ஒட்டுமொத்த வழித்துத் துடைத்தெடுக்கும் செயற்பாடுமே நடைபெறுகின்றது.

மயிலத்தமடு, மாதவணை, கெவிலியாமடு போன்ற பிரதேசங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையிலும், தொல்லியல் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கலாச்சார இடங்களெல்லாம் பறிக்கப்பட்ட நிலையிலுமே நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.