இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையகபெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட 1235 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு.

(க.கிஷாந்தன்)

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

கொவிட் – 19 தொற்று நிலைமையால் சூம் தொழில்நுட்பம் ஊடாகவே இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்படி பிரதான நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழ், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இந்திய தூதுரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பிரதான நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன்போது இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பற்றி காணொளி ஒளிபரப்பட்டது. பிரமுகர்களின் உரைகளைத்தொடர்ந்து சூம் தொழில்நுட்பம் ஊடாக திறப்பு விழா இடம்பெற்றது.

இதன்பிரகாரம் காலி மாவட்டத்தில் 50 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 479 வீடுகளும், கண்டி மாவட்டத்தில் 184 வீடுகளும், அட்டன் மற்றும் பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் 155 வீடுகளும், நுவரெலியா, அக்கரபத்தனை பகுதியில் 267 வீடுகளும் இவ்வாறு திறந்துவைக்கப்பட்டன.

மேற்படி பகுதிகளில் இருந்த இ.தொ.கா. பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊடாக வீடுகளுக்குரிய ஆவணங்கள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதேவேளை, இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் புஸல்லாவை சரஸ்வதி கல்லூரியில் அமைக்கப்பட்ட கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.

அந்தவகையில் நுவரெலியா – இராகலை லிடேஸ்டேல் தோட்ட பிரிவான டியநிலை மேல் பிரிவு தோட்டத்தில்   நிர்மானிக்கப்பட்ட 166 வீடுகள் கொண்ட இவ் வீட்டு  திட்டத்திற்கான பெயர் பலகை (04.10.2021) திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வீடுகளும் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேசத்திற்குறிய லிடேஸ்டெல் வீடமைப்பு திட்ட திறப்பு விழாவானது பிரதான நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இராஜாங்க அமைச்சரின் வழிகாட்டலுக்கு அமைய நிகழ்வினை சிறப்பித்த இ.தொ.கா தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி பி.ராஜதுரை, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எ.பிலிப், நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ், இளைஞர் அணி பொது செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ்,பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதிய அதிகாரிகள் மற்றும் யு.என்.எபிடாட்  நிறுவன பணிப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு பெயர் பலகை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் இவ் வீடுகளை உத்தியோகப்பூர்வமாக மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் டியநிலை தோட்டத்தில் இந்திய நிதியுதவியுடன் யூ.என்.எபிடாட் நிறுவனம் குறித்த 166 வீடுகளின் கட்டுமான பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இரண்டு படுக்கை அறைகள் ,ஒரு வரவேற்ப்பு அறை,சமையல் அறை மற்றும் மலசல கூடம் என ஐந்து அறைகள் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

166 வீடுகளைக் கொண்ட இந்த இந்திய தனிவீட்டு திட்டத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு குடிநீர்,பிரதான வீதி மற்றும் உள்ளக வீதிகள்,மற்றும் மின்சாரம்  என உட்கட்டமைப்பு வசதிகள் முன்னெடுக்கப்படாமல்    காணப்பட்டது.

அதேநேரத்தில் கடந்த 2019 இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தினால் இவ்வீடமைப்பு திட்டம் முழுமை பெறாது பயனாளிகளுக்கு கையளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து இத் தனி வீட்டு திட்டத்தில்  குறைபாடாக காணப்பட்ட மின்சாரம் ,நீர்,மற்றும் வீதி அபிவிருத்தி உட்கட்டமைப்பு பணிகள் தற்போதைய அரசாங்கத்தின் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இவ் உட்கட்டமைப்பு பணிகளை விரைவாக முன்னெடுக்க பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் 26.6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தார்.

இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியில் வீட்டு திட்டத்திற்கான பயனாளிகள் பயன்பெறும் வகையில் பிரதான வீதிகள் செப்பனிட 5.1 மில்லியனும்,உள்ளக வீதிகள் செப்பனிட 4.3மில்லியனும் ஒதுக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் குடிநீருக்கென 10.2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இதில் இரண்டு பிரதான நீர்த்தாங்கிகள் அமைக்கப்பட்டு வீடுகளுக்கான  குடிநீர் குழாய் மூலம்  வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வீட்டு திட்டத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள 166 வீடுகளுக்கான  மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

இத்திற்கென 6.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.