நுவரெலியா – இராகலையில் அரசாங்கத்திற்கு எதிராக த.மு.கூ ஏற்பாட்டில் போராட்டம்

(க.கிஷாந்தன்)

இந்த அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கின்றது.

விரைவில் இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவோம். அதுவரை ஓயமாட்டோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நாடாளுமன்ற எம்.பியுமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஒன்று 24.10.2021 அன்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இராகலை நகரில் இடம்பெற்றது.

இராகலை – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் போராட்டம் ஆரம்பமாகி பிரதான வீதியில் ஊர்வலமாக இராகலை முருகன் ஆலயம் வரை சென்றடைந்தது. அங்கு ஆலயத்திற்கு முன்பாக கூட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு இராகலை வர்த்தகர்கள் கடைகளை மூடி ஆதரவு தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய எம்.பி இராதாகிருஷ்ணன்,

குறுகிய காலத்தில் மக்களின் அதிருப்தியை சம்பாதித்து கொண்ட ஒரு அரசாங்கம் என்றால் அது இந்த அரசாங்கமே. இன்று எதை கேட்டாலும் விலையேற்றம், தட்டுப்பாடு என்ற வார்த்தைகளே வெளிவருகின்றது.

இந்த தீபாவளி தமிழர்களுக்கு ஒரு கறுப்பு தீபாவளியைாக அமைய போகின்றது. பொருட்களின் விலையேற்றம், வேலைக்கான உரிய சம்பளமின்மை, தொடர்ச்சியான மக்களின் போராட்டம் போன்ற காரணங்களால் இந்த தீபாவளியை மக்கள் கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக பெருந்தோட்ட தொழிரலாளர்கள் விசேடமாக கொண்டாடும் தீபாவளி தினத்தை துக்க தினமாக கொண்டாட வேண்டிய சூழ்நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கியிருக்கின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தில் 50 ரூபாய் சம்பள உயர்வை தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாது என்று எங்களை பார்த்து கை நீட்டியவர்கள் இன்று என்ன செய்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வாய் மூடி மௌனிகளாக அரசாங்கத்தை வக்காளத்து வாங்கி கொண்டிருக்கின்றார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக நடக்கின்ற அநீதிகளுக்கு குரல் கொடுக்க முடியாமல் இருக்கின்றார்கள்.

இப்படியான ஒரு நிலையில் நல்லாட்சியை குறை சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது. நல்லாட்சி அரசாங்கத்தில் கணிசமான சம்பள உயர்வை வழங்கியதோடு, எந்த காரணத்திற்காகவும், அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கபடவில்லை.

எனவே, மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை தமிழ் முற்போக்கு கூட்டணியின் போராட்டம் தொடரும்.

வேலுகுமார் எம்.பி கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அத்தியவசிய பொருட்களின் விலைகளை குறைப்பது எனது பொருப்பல்ல என்று சொல்லுகிறார். அப்படியானால் நான் அவரை பார்த்து கேட்க விரும்புகின்றேன். எதற்காக அரசி விலை, சீனி விலை உட்பட அத்தியவசிய பொருட்களுக்கு விலை குறைக்க வர்த்தமானி அறிவித்தலை ஏன் வெளியிட்டீர்கள்.

அப்படியானல் அது வெறும் கண் துடைப்பா ? மக்களை ஏமாற்றும் செயலா? அல்லது மக்கள் கூறினார்களா வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும் படி. எல்லாம் நீங்களே செய்து விட்டு கடைசியாக சிறுபிள்ளை தனமாக இவ்வாறு கூறுவது எந்த வகையில் பொருத்தமானது என்று வேலுகுமார் எம்.பி கருத்து வெளியிட்டார்.

உதயகுமார் எம்.பி கருத்து தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பாரிய துரோகம் இழைத்திருக்கின்றது. சம்பள உயர்வு இல்லை. குறைவான வேலை நாட்கள் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு இப்படி பெருந்தோட்ட தொழிலாளர்களை குழியில் தள்ளிவிட்டிருக்கின்றது இந்த அரசாங்கம்.

இந்த கப்பல் 75 வீதம் மூழ்கிவிட்டது. மீதம் இருப்பது 25 வீதமே. எந்த காரணம் கொண்டும் காப்பாற்ற முடியாது. இந்த அரசாங்கம் திசையின்றி, நோக்கம்யின்றி, நிர்வாக கட்டுப்பாட்டின்றி தத்தளித்து கொண்டிருக்கும் ஒரு அரசாங்கம்.

இந்த அரசாங்கத்தை நம்பி வாக்களித்த மக்களுக்கு இந்த அரசாங்கம் நல்ல பாடத்தை புகட்டிருக்கின்றது என்று உதயகுமார் எம்.பி கருத்து தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.