பெரும்பான்மையினரின் மனங்களிலுள்ள நரகாசுர அரக்கர்கள் அழியும் தீபாவளியாக அமையட்டும். – கோ.கருணாகரம் (ஜனா) பா.உ.

காலங் காலமாக எம் மக்கள் அனுபவித்துவரும் இனத்துவ ரீதியான அடக்குமுறைகளுக்கு ஒவ்வொரு வருடத்திலும் தீர்வு கிடைத்துவிடும் என்றே நாம் நம்புகிறோம். வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம். அதனாலேயே கூட மக்களிடம்வெறுப்பு குடிகொண்டுவிட்டது.

கடந்த காலத்தில் யுத்தத்தின் மூலம் மக்கள் கடும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து,  யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்துக் கொண்டே 12 வருடங்களைக் கடத்திவிட்டார்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறும் அரசாங்கங்கள் பூச்சாண்டிகளைக் காண்பிப்பது போன்று ஏதோ ஒன்றைக் காட்டி மக்களை ஏமாற்றுவதே வழக்கமாக இருந்து வருகிறது. இம்முறை தீபாவளிப் பரிசாக ஒரே நாடு ஒரே சட்டம் இலங்கை அரசாங்கத்தினால் கடந்த வாரத்தில் கொடுக்கப்பட்டது. அதற்கான எதிர்ப்புக் கருத்துக்கள் தமிழ்த் தரப்புகளால் முன்வைக்கப்பட்ட வண்ணமே இருக்கின்றன.

தீபத்திருநாள் என்பது நரகாசுரனை வதம் செய்த தினமாகும் இம்முறை இந்தத்  தீபாவளியாகிலும் பெரும்பான்மையினரின் மனங்களிலுள்ள நரகாசுரன்களை அழிப்பதாக அமைய வேண்டும். வெறுமனே கொண்டாட்டம், மகிழ்ச்சி என்பவைகள் மாத்திரம் பண்டிகையல்ல என்பதனை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்கின்ற திருநாளாக இன்றைய தினம் அமையவேண்டும்.

அசுரர்கள் அழிக்கப்பட்டு மகிழ்ச்சியைக் கொண்டாடும் இந்த நாளில் ஜனாதிபதியும் அரசாங்கமும் எதிர்பார்க்கின்ற சுபீட்சமான நாடு உருவாக வேண்டுமானால் தமிழ் மக்களுக்கான சுதந்திரம்  ஏற்படுத்தப்படவேண்டும்.

தமிழர்களுக்கு ஒருவித சட்டம் பெரும்பான்மை சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் என்றிருக்கின்ற இந்த நாட்டில் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதலே அடக்குமுறைகளுக்குள்ளும், நெருக்குதல்களுக்குள்ளும் வாழ்ந்துவரும் தமிழ் மக்களின் தீபாவளி என்பது பாரபட்சம், பாகுபாடு, ஒடுக்குமுறைகள் இல்லாத சமத்துவ உரிமைகள் வழங்கப்படும் நாளாகவே இருக்கும்.

இருப்பினும் இன்றைய தீபத்திருநாளில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான தீர்வானது ஏற்படுவதற்கான முயற்சிகளில் அனைத்து  தமிழ் அரசியல் தலைமைகளும் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு திடசங்கர்ப்பம் பூணுகின்ற நாளக அமையவேண்டும் என முதலில் வேண்டிக் கொள்கிறேன்.

அத்துடன், மகிழ்ச்சியும், நிமம்மதியும், அமைதியும் முன்னேற்றமுமுடையதான பிரகாசமான எதிர்காலம் எம் மக்களுக்கு ஏற்படவேண்டும் என்று இன்றை மகிழ்ச்சியான தினத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.