கடலரிப்பு காரணமாக பாண்டிருப்பில் மரங்கள் வீதிகள் கடலுக்குள் இழுத்து செல்லப்படுகிறது.

காலநிலை மாற்றம் காரணமாக கடலரிப்பு  ஏற்பட்டுள்ளதுடன் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் உள்ள  மரங்கள் வீதிகள் கடலுக்குள் இழுத்து செல்லப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடலரிப்பினால் பாண்டிருப்பு கடற்கரை பிரதேசத்தில்  மரங்கள் வீழ்ந்துள்ளதுடன் புதிதாக நிர்மாணிக்கபட்டிருந்த வீதிகளின் ஒரு பகுதி முற்றாக இடிந்து கடலுக்குள் வீழ்ந்துள்ளதை காண முடிகின்றது.

இதனால் அப்பகுதியில்    போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் கடந்த சுனாமி பேரலைத் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள்  அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

குறித்த கடலரிப்பின் தாக்கம் தொடர்பாக அப்பகுதி சமூக ஆர்வலர் தாமோதரம் பிரதீவன்  கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் கரையோர பாதுகாப்பு பிரிவினருடன் உரையாடி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

அதேவேளை இந்த விடயம் தொடர்பாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடனும் பேசியுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும்  கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஜே. அதிசயராஜ்   தன்னிடம் தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.

இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு  அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில்  ஒலுவில் தொடங்கி நிந்தவூர் ,காரைதீவு வரையிலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பின் காரணமாக  400 மீட்டர் வரையிலான நிலப்பகுதிக்குள் கடல் புகுந்துள்ளதாககவும்   கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகின்றமையினால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.காரைதீவுஇ  நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரித்துவருகின்றமையினை தடுக்க  நிரந்தரமாக கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை முன்னெடுக்க  பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் கடலரிப்பு மிகவும் தீவிரமடைந்துள்ளதால்  அதனைத் தடுக்கும் தற்காலிக நடவடிக்கையாக கரையோரைப் பகுதிகளில் மணல் நிரப்பப்பட்ட பைகளை அடுக்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.எனினும் குறித்த கடல்   அரிப்பினால் மீன்பிடி வாடிகள்இ பாதிப்புற்று கடல் ஊடறுத்து செல்லுவதனால் கரையோரத்திலுள்ள தென்னை மரங்களும் அழித்து விடும் அபாய நிலைமை ஏற்பட்டு வருகின்றதுடன்  மீன்பிடி தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அம்பாறை மாவட்டத்தின் கரையோரைப் பிரதேசங்களில் இவ்வாறு கடலரிப்பு தீவிரமடைவதற்கு  ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே பிரதான காரணம் என  அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக குற்றச்சாட்டும்  தெரிவிக்கப்பட்டு வருவதுடன் ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பைத் தடுப்பதற்காக அங்கு கரையோரங்களில் பாரிய பாறாங்கற்கள் இடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் காரணமாக கடலரிப்பின் தீவிரம் அங்கு கணிசமானளவு குறைந்துள்ளது.

இவ்விடயத்தில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள்   நிரந்தர தீர்வு கிடைக்கும்   வேலைத்திட்டம் ஒன்றினை  நடைமுறைப்படுத்த வேண்டும் என மீனவ சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.