பஸ் – கனரக லொறி விபத்து – ஒருவர் பலி – இருவர் காயம்

(க.கிஷாந்தன்)

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பகதொழுவ பகுதியில் 11.10.2021 காலை 7 மணியளவில் இ.போ.ச க்கு சொந்தமான பழுது பார்க்கும் (பிரேக் டவுன்) பஸ் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற கனரக வாகனம் ஒன்றும் அட்டன் பகுதியில் இருந்து நாவலப்பிட்டி பகுதிக்கு சென்ற இ.போ.ச க்கு சொந்தமான பழுது பார்க்கும் (பிரேக் டவுன்) பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் கனரக வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளதோடு, பஸ்ஸின் சாரதியும், உதவியாளரும் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த விபத்து காரணமாக சுமார் 30 நிமிடங்கள் கினிகத்தேனை – கண்டி வீதி ஊடான போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின.

குறித்த கனரக வாகன சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளன.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.