பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை வலுவூட்டும் வேலைத்திட்டமும், வீட்டுத்தோட்ட பயிர் செய்கைக்கான விதைப்பொதிகள் வழங்கி வைப்பும் !
இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தினால் இறக்காமம் பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களின் சுயதொழில்களை வலுவூட்டி வாழ்வாதார உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளை வலுவூட்டும் வேலைத்திட்டம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நஸீல் அஹமட் தலைமையில் செவ்வாய் கிழமை காலை 10.00 மணியளவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களை பொருளாதார ரீதியாக அவர்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்கிவித்து மேலும் வலுவூட்டுவதன் மூலம் நிலைபேறான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இவ்வாழ்வாதார உதவி வழங்கும் இந்நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.றிம்ஸியா ஜஹானின் ஒருங்கிணைப்பின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களான இமான், எஸ்.ஷாந்தி, நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எஸ். சுபுஹான், நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் ஜி.சுகீர்தனி ஆகியோர் கலந்துகொண்டதோடு சுயதொழிலில் ஈடுபடும் பெண் முயற்சியாளர்களுக்குத் தேவையான இயலுமை விருத்தி ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் இவ் வேலைத்திட்டம் பற்றிய தெளிவையும் வழங்கிவைத்தனர்.
அதனை தொடர்ந்து இறக்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மகளிர் சங்களுக்கு விதைப்பொதிகளை வழங்கி வைக்கும் ஆரம்ப நிகழ்வும் இடம்பெற்றது. ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் ஆரோக்கியமான உணவு கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கையை ஊக்கிவிப்பதற்கான பல வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பிரதேச செயலக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் பெண்கள் பணியகத்தினால் நாடளாவிய ரீதியில் மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு பயிர் விதைப் பொதிகளை வழங்கும் வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்தொடரில் இடம்பெற்ற இவ்விதைப்பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்விற்கு இறக்காமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் கலந்து கொண்டதுடன் மேலும் உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.சபறுல் ஹஸீனா ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விதைப்பொதிகளை வழங்கிவைத்தனர்.
கருத்துக்களேதுமில்லை