இனவாதமில்லாமல், பிரதேசவாதங்களுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன் : சாய்ந்தமருதில் வைத்து மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் வீரசிங்க அறிவிப்பு.

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்கு என்னால் முடியுமான உதவிகளை செய்ய எப்போதும் தயாராக உள்ளேன். எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியை கொண்டு அம்பாறை மாவட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கு நிறைய ஒதுக்கீடுகளை செய்துள்ளேன். அந்த வகையில் சாய்ந்தமருது பொலிவேரியன் மைதான அபிவிருத்திக்கும் 5 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளேன் என அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டவ்ளியூ. டீ. வீரசிங்க தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (28) மாலை சாய்ந்தமருது தனியார் விடுதியில் காரைதீவு பிரதேச சபை உப தவிசாளரும், ஜாஹீர் பௌண்டசனின் தலைவருமான ஏ.எம். ஜாஹிரின் தலைமையில் நடைபெற்ற ஜாஹீர் பௌண்டசனின் ஓராண்டு பூர்த்தியும், டீ சேர்ட் அறிமுக நிகழ்வும் நடைபெற்ற போது நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜாஹீர் பௌண்டசனின் பொதுச் செயலாளர் செல்லத்துரை பஸ்லூனின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன்,  ஜாஹீர் பௌண்டசனின் செயற்குழு உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர், உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய காரைதீவு பிரதேச சபை உப தவிசாளரும், ஜாஹீர் பௌண்டசனின் தலைவருமான ஏ.எம். ஜாஹிர் பிரதேச பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை சுட்டிக்காட்டியதுடன், உள்ளக வீதிகள், பிராந்திய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் விளக்கி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் என்ற அடிப்படையில் தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கையை முன்வைத்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் பொன்னாடை போத்தி நினைவுசின்னம் வழங்கி கௌரவிக்கப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.