அடுத்த சில மாதங்களில் திருப்புமுனையை எட்ட முடியும் : மத்திய வங்கியின் புதிய ஆளுநர்…!!!

நாட்டின் பொருளாதாரத்தை திட்டவட்டமான திசையில் வழிநடத்தும் ஆற்றலும் பலமும் இலங்கை மத்திய வங்கிக்கு இருப்பதாக தான் நம்புவதாக மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த சில மாதங்களில் திருப்புமுனையை எட்ட முடியும் என்கிறார். அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையும் சமூக ஸ்திரத்தன்மையும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்று (08) தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் இடம்பெற்ற முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். நாட்டின் முன்னேற்றத்திற்காக தாம் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், தனது விவகாரங்களில் அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்காமல் சுதந்திரமாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பணியை முன்னெடுப்பதற்குத் தேவையான பின்னணியைத் தயாரித்து இந்த அபாயத்தை ஏற்று இந்த நாட்டுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் கடனை மறுசீரமைக்க கூடிய விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், உடனடியாக முன்மொழிவுகளை கோருவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முன்மொழிவுகளை பரிசீலித்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உடனடியாக குழுவொன்றை நியமிக்க உத்தேசித்துள்ளதாக கலாநிதி வீரசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார். நாட்டின் சார்பாக தீர்மானங்களை எடுப்பதில் எந்த அரசியல் அதிகாரத்தினாலோ அல்லது அரசியல் உள்நோக்கத்திலோ செயற்படும் எண்ணம் கொண்டிருக்கவில்லை எனவும் இலங்கை மத்திய வங்கி இந்த நாட்டு மக்களுக்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டியுள்ளது எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.