சட்டவிரோதமாக எரிபொருளை சேகரித்து விற்றதாக 71 வயது நபர் கைது
சட்டவிரோதமாக எரிபொருளை களஞ்சியப்படுத்தி அதிக விலையில் விற்றமை தொடர்பில் 71 வயது சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF)கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று (11) பிற்பகல், STF புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, வத்தளை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஹெந்தலவத்தை பிரதேசத்தை சுற்றிவளைத்த அதிகாரிகள், சட்டவிரோதமாக எரிபொருளை வைத்திருந்து, அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, குறித்த நபரிடமிருந்து 30 லீற்றர் 750 மில்லி லீற்றர் பெற்றோல் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹெந்தலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடையவர் நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் வத்தளை பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இன்று (12) முதல் 3 நாட்களுக்கு கலன்கள், பீப்பாய்களில் எரிபொருள் வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க நேற்று (11) தெரிவித்திருந்தார்.
பொதுமக்கள் தேவையற்ற வகையில் எரிபொருளை பதுக்கி வைப்பதை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை