மூழ்கும் நிலையிலுள்ள அரசாங்க கப்பலில் நடுவில் அமர்ந்துகொண்டிருக்கும் முஷாரப் நயவஞ்சகனின் மொத்த உருவமாக இருக்கிறார் : ம.கா அமைப்பாளர் மனாப் காட்டம்
நூருல் ஹுதா உமர்
நயவஞ்சகனின் அடையாளங்களான பேசினால் பொய் பேசுவான், வாக்களித்தால் மாறு செய்வான், அவன் மீது நம்பிக்கை வைக்கப்பட்டால் மோசடி செய்வான் எனும் சகல விடயங்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவாகி மொட்டரசின் முதன்மை முட்டாக மாறி இராஜாங்க அமைச்சராக இப்போது பதவியேற்றிருக்கும் எஸ்.எம்.எம். முஷாரபை காண்கிறேன். அனைகின்ற இடத்திற்க்கு ஏற்றாற்போல பொய்களை கொண்டு ஆணியடிக்கும் ஒருவராகவும் அவர் தொடர்ந்தும் இருந்து வருகிறார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப் சாடியுள்ளார்.
இன்று (24) காலை கல்முனையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய அவர், தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கடந்த தேர்தல் காலத்தில் கட்சிக்காக செலவு செய்து மும்முரமாக தேர்தல் பணிசெய்த சக வேட்பாளர்களான கே.எம்.ஏ. ரஸாக் (ஜவாத்), எம்.ஏ. தாஹீர், எம்.ஐ.எம். மாஹீர் போன்ற எவரையும் தேர்தல் பணிகளுக்காக பொத்துவிலுக்கு அனுமதிக்காது கட்சி கட்டுக்கோப்புக்களையும், கொள்கைகளையும் மீறி செயற்பட்டார். அரசியல் பழிவாங்களினால் சிறையில் தலைவரின் குடும்பமே கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதில் எவ்வித சலனமுமின்றி மொட்டுக்கு தைரியமாக முட்டுக்கொடுத்தவர் இன்று புதிய சத்தியவான் வேடம் போட்டுள்ளார்.
எவ்வித அரசியல் அனுபவமுமில்லாத எஸ்.எம்.எம். முஷாரபை கட்சி பதவிகளை வழங்கியும், இன்னோரன்ன சலுகைகளை கொண்டும் அழகுபார்த்து பாராளுமன்ற உறுப்பினராக பதவியுயர்த்தி கௌரவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் கட்சி தலைமைக்கும் துரோகம் செய்தவர் பின்நாட்களில் ஜும்மா தொழுது விட்டு ஜும்மாபள்ளிவாசலின் மிம்பரின் முன்னிலையில் வைத்து பொய்யான கதைகளை தெரிவித்து மக்களை முட்டாள்களாக்குவதாக எண்ணி அவர் தன்னை பொய்யனாக அடையாளம் காட்டிக்கொண்டார்.
பொத்துவில் மக்களின் வாக்குகளினால் மட்டும் பாராளுமன்ற உறுப்பினராக வந்ததாக எண்ணிக்கொண்டு அரசியல் செய்யும் முஷாரப் அவர்கள் அரசியல் பரப்பில் மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் ஏறி இராஜாங்க அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு சமூக அரசியல் செய்வதாக இப்போது கதையளப்பது இந்த நூற்றாண்டின் முதற்தர முட்டாள்த்தனமாக நான் பார்க்கிறேன்.
கருத்துக்களேதுமில்லை