முழுப்பூசணிக்காயை ஒரு பிடி சோற்றில் மறைக்க முயன்றால் அமைச்சர் நஸீரிடமுள்ள ஆதாரங்களின் முன்னாள் மண்டியிடவேண்டி வரும் – ஏறாவூர் முன்னாள் நகர பிதா நாஸர் எச்சரிக்கை !!

உண்மைகளை மழுங்கடித்து தலைமைத்துவ விசுவாசமெனும் பெயரில் முழுப்பூசணிக்காயை ஒரு பிடி சோற்றில் மறைக்க என்னும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் அவர்கள் முழுநிதானமாக இருந்து பதிலளிக்க வேண்டி இந்த கேள்விகளை தொடுக்கிறேன் என ஏறாவூர் நகர சபை முன்னாள் நகர பிதா ஏ.அப்துல் நாஸர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல். தவத்தின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,  நீங்கள் தலைவரின் காணிவேலுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தேடிவந்து தலைவரை சந்தித்த கதையை கூறுகின்றீர்கள். ஆனால் அது உண்மையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தேடிவந்த கதையல்ல மு.கா தலைவர் ஹக்கீம் வரவழைத்த கதையென்பதை உங்களுக்கு கூறிவைக்க விரும்புகிறேன். அதற்கு முன் தலைவர் தானாக ஓடிச்சென்று பொதுஜன பெரமுன சார்பிலான நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் வீட்டில்  2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த கதையை மறைத்து விட்டீர்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அங்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து தனக்குத் தேவையான அனைத்து ஒப்பந்தங்களையும், சலுகைகளையும் அமைச்சரவை பதவிகளையும் பற்றிய பேச்சுவார்த்தை செய்து முடிக்க வில்லை என்று இப்புனித நோன்பு காலத்தில் இறைவன் மீது ஆணையிட்டு சத்தியம் செய்ய தலைவர் தயாராக இருக்கிறாரா என்று உங்களினால் கேள்வியெழுப்ப முடியுமா? அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் அவர்களின் வீடும் தலைவர் ஹக்கீமின் கார்னிவல் வீடு என்று தான் கூறப்போகிறீர்களா? அல்லது கோத்தாபய வீடுதேடிவந்து தலைவரை சந்தித்தார் என்று கூற போகிறீர்களா?
அமைச்சர் பதவிகள், சலுகைகளை மட்டுமே அங்கு மு.கா தலைவர் ஹக்கீம் பேசினார். நாட்டு முஸ்லிங்கள் மத்தியில் கொதித்துக் கொண்டிருந்த முஸ்லிம் ஜனாஸா விடயம் தொடர்பில் கூட கோரிக்கைகளை அப்போது அவர் முன்வைக்க வில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? தனது சொந்த தேவைகளுக்கான சலுகைகளுக்கு  பதிலீடாக அரசினால் கொண்டுவரப்பட்ட இருக்கின்ற 20 வது திருத்த சட்ட மூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்கு எம்.பிக்களும் ஆதரவளிப்பார்கள் என்ற உறுதிமொழியை கோத்தாவுக்கு வழங்கினார். அந்த இடத்திலையே அந்த 4 எம்.பிக்களின் பேரம் பேசும் சக்தி இல்லாதொழிக்கப்பட்டது.
 ஜனாதிபதி கோத்தாபய அவர்கள் ஹக்கீமின் சலுகைகள் தொடர்பில் தனது தம்பி அமைச்சர் பசிலிடம் பேசுமாறு கூறி சந்திப்பை ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்த சந்திப்பு முன்னாள் அமைச்சர் மிலிந்தவின் வீட்டில் நடைபெற்றது.  20 வது திருத்த சட்ட மூலத்திற்கு நான்கு எம்.பிக்களும் ஆதரவளிப்பார்கள் என்ற உறுதி மொழியை பசிலுக்கும் அங்கு வைத்து வழங்கினார் ஹக்கீம். அதன் பின்பு எம்.பிக்களை அழைத்து தலைவர் ஹக்கீம் 20 வது சட்டமூலம் தொடர்பில் பேசிய போது அரசு ஆதரவு கேட்கிறது நீங்கள் அமைச்சர் பசிலிடம் கலந்துரையாடி ஆதரவு வழங்குங்கள் என்று பணித்தார். இது சம்பந்தமாக எம்.பிக்கள் பசிலிடம் பேசி ஜனாஸா விடயங்கள், தனியார் சட்ட விடயங்கள், உள்ளூர் பிரச்சினைகள், முஸ்லிங்களின் உரிமை தொடர்பில் சரியான உறுதிமொழியை பெற வேண்டும். அதிலும் உங்களின் தலைமையில் தான் கூட்டம் நடைபெற வேண்டும் என்று கேட்டிருந்தனர். அந்த அடிப்படையில் தான் 2020 ஒக்டோபர் 18 ஆம் திகதி தலைவருடைய “காணிவேல் இல்லத்தில்” தலைவரினால் அந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த சந்திப்பில் பசிலிடம் ஒன்றரை மணித்தியாலயங்கள் ஜனாஸா விடயங்கள், முஸ்லிம் உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைகள், பிரதேச முரண்பாடுகள் தொடர்பில் பேசப்பட்டு பசிலிடம் இருந்து உறுதிமொழியை பாராளுமன்ற குழு வாங்கிகொண்டது. அதன் பின்னரே முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தை ஆதரித்து நாடாளுமன்றில் வாக்களிப்பார்கள்” என்ற உறுதிமொழியை பசிலுக்கு வழங்கியிருந்தார்கள்.
சகோதரர் தவம் அவர்களே நீங்கள் கூறுவது போன்று பசில் தலைவரிடம் பேசியது உண்மை. பேசிய பின்னர் தொலைபேசியை ஆப் பண்ணிவிட்டார் என்பது அப்பட்டமான பொய். வாக்களிப்பு முடியும் வரை தலைவர் ஹக்கீம் ஜனாதிபதியுடனும், பசிலுடனும் தொடர்பில் இருந்து முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்தை ஆதரித்து நாடாளுமன்றில் வாக்களிப்பார்கள்” என்று உறுதியளித்திருந்தார் என்பதே உண்மை. இப்படி பசில் தொலைபேசியை ஆப் பண்ணியிருந்தால் அவசரமாக உயர்பீடத்தை கூட்டி கண்டிப்பான முறையில் எம்.பிக்களை 20க்கு ஆதரவளிக்காமல் கட்டுப்படுத்தி இருக்கலாமே? அதை ஏன் தலைவர் செய்யவில்லை ?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடத்தில் இருந்த பெரும்பான்மையானோர் 20க்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் ஏன் தலைவர் ஹக்கீம் உயர்பீடத்தை கூட்டவில்லை. உண்மை என்னவென்றால் இந்த 20க்கு ஆதரவளிக்கும் விடயத்தை தலைவரே தான் பொறுப்பெடுத்து ராஜபக்ச சகோதரர்களுக்கு கட்சிதமாக நிறைவேற்றி கொடுத்தார் என்பதே உண்மை. எனவே தவம் அவர்களே உண்மையில் தலைவர் குற்றம் இழைத்துள்ளாரா ? அமைச்சர் நஸீர் அஹமட் குற்றம் இழைத்துள்ளாரா ? என்பதை விசாரணை செய்ய புத்திஜீவிகளும், கல்விமான்களும், உலமாக்களையும் கொண்ட குழுவை நியமித்து இருதரப்பு விசாரணை செய்ய ஏற்பாட்டை  செய்யுங்கள் அதில் அமைச்சர் நசீர் அஹமட் சார்பில் நான் கூறிக்கொள்ள விரும்புவது யாதெனில் தலைவரின் கார்ணிவல் வீட்டில் வைத்து பசில் முன்னிலையில் தலைவர் அவர்கள் 04 எம்.பிக்களையும் 20க்கு வாக்களிக்க சொன்னமைக்கான விஞ்ஞான மற்றும் அறிவு ரீதியான ஆதாரங்களை கொண்டு நிரூபிக்க முடியும். இப்படி அதில் ஹக்கீம் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டால் உங்களினால் ஹக்கீமை குற்றமிழைத்து விட்டீர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர் என பகிரங்கமாக கூற முடியுமா? இதனை நான் சவாலாக விடுக்கிறேன்.
இந்த தேசம் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் 20 லட்சம் முஸ்லிங்களும் 20 சம்பந்தமாக பாரிய விவாத்தை நடத்திக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் பொறுப்பான கட்சியின் உச்சபீட உறுப்பினர் என்ற ரீதியில் அவசரமாக செய்யவேண்டிய பணி உங்களுக்கு பிடித்தமானவர்களை கொண்ட உலமாக்கள், புத்திஜீவிகளை கொண்ட விசாரணை குழுவை நியமிக்க முன்வாருங்கள். இதனூடாகவே உங்களினதும் தலைவரினதும் நேர்மையை நிரூபிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.