கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது…

பல வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆறு பொலிஸ் நிலையங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணை பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொட்டிகாவத்தையில் வசிக்கும் 37 வயதுடையவர் மற்றும் கொலன்னாவ, மெகொட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரது வீடுகளில் இருந்தும் மற்றும் விற்பனை செய்யப்பட்டிருந்த 2 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளையிடப்பட்ட பொருட்கள் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும், கடந்த காலங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் வெல்லம்பிட்டிய, முல்லேரியா, கடுவெல, நவகமுவ, மாலபே மற்றும் அதுருகிரிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இன்று (15) புதுக்கடை இலக்கம் 2 நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.