யாழில் மீண்டும் நாளை முதல் நடைமுறையாகும் செயற்பாடு!
யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட தனியார் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்தே அனைத்து தனியார் போக்குவரத்து சேவைகளும் ஆரம்பமாகும் என மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாடு நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண நகரிற்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து தற்சமயம் இரவு நேரத்தில் மட்டுமே யாழ் – கொழும்பு பேருந்து சேவைகள் நடைபெறுகின்றன.
நகரில் நெருக்கடி
இந்நிலையில் யாழ். நகரப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு இப்பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகளை ஆரம்பிக்க மாநகர முதல்வரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பல்வேறு தடைகளால் தாமதம் அடைந்தன.
இந்நிலையில் மீண்டும் மாநகர முதல்வர் எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து முதற் கட்டமாக அனைத்து தனியார் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பேருந்து சேவையினை நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிப்பது தொடர்பில் இன்று ஆராயப்பட்டது.
தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இணக்கம்
இந்த சந்திப்பில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் போக்குவரத்து சேவை சங்கங்களின் தலைவர்கள் அதன் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது யாழ். நகரின் போக்குவரத்து நெருக்கடிகளைக் கருத்திற்கு கொண்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தமது அனைத்துச் சேவைகளையும் முன்னெடுக்க தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை