குணாளன், கார்த்தீபன் முயற்சியால் நீக்கப்பட்டது நயினாதீவுக்கான பாஸ்!

நயினாதீவு செல்வதற்கான பாஸ் நடைமுறை நயினாதீவைச் சேர்ந்த ம.கார்த்தீபன் மற்றும் க.குணாளன் ஆகியோர் அதற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ்  இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருடன் இவ்விடயம் தொடர்பில் தொலைபேசியில் வினவியது.

இதன்போது எமக்கு பதிலளித்த பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மால், அவ்வாறான எந்த பாஸ் நடைமுறை மற்றும் மட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என ஆணைக்குழுவுக்கு தெரிவித்ததுடன் உடனடியாகவே நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் உப.பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து  இந்த விடயம் தொடர்பாக, எம்மால் குறிகாட்டுவான் மற்றும் நயினாதீவு உப காவலரண்களில் பொறுப்பதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. தமக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தாம் இனி இவ்வாறான மட்டுப்பாடுகளில் விதிக்கமாட்டோம்” என தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.