இலங்கை ரூபாயின் பெறுமதி பெருமளவில் வீழ்ச்சியடைந்திருந்தால் நாட்டில் பெரும்பாலான இறக்குமதியாளர்கள் இறக்குமதியைக் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்- அஜித் நிவாட் கப்ரால்

நாட்டில் இறக்குமதியை இடைநிறுத்தாது விட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 300 ரூபாயாக வீழ்ச்சி கண்டிருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவர், யாழில் முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தார். இந்தக் கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “இலங்கை ரூபாயின் பெறுமதி பெருமளவில் வீழ்ச்சியடைந்திருந்தால் நாட்டில் பெரும்பாலான இறக்குமதியாளர்கள் இறக்குமதியைக் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

வடக்கு மாகாணத்திலிருந்து தங்கம் கடத்தலைத் தடுக்க, தங்கம் மீதான வரியை இந்தியா போன்று பராமரிக்க வேண்டும்.

மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பூங்காக்களை அமைக்க முன்வரும் முதலீட்டாளர்களுக்கு நீர் நிலைகளை அண்டிய பிரதேசங்களில் 15 தொடக்கம் 20 ஏக்கர் காணியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

குறித்த, கலந்துரையாடலில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், அமைச்சின் செயலாளர், மத்திய வங்கி அதிகாரிகள், பிரதேச அரச, தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள், முதலீட்டாளர்கள், நொதேர்ன் தனியார் வைத்தியசாலைப் பணிப்பாளர், பனை அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை நிர்வாகத்தினர் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.