இறக்காமம் கொரோனா மையவாடி அனுமதி இன்னும் கிட்டவில்லை : உறுதிப்படுத்தினார் அம்பாறை அரசாங்க அதிபர்.

கொரோனா மையவாடி அனுமதி தொடர்பாக கடந்த 28.05.2021ஆம் திகதிய GA/COVID/1 என்ற இலக்கம் கொண்ட கொரோனா மையவாடி தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அம்பாறை அரசாங்க அதிபரினால் அனுப்பப்பட்ட கடிதம் சம்மந்தமாக என்ன நடந்துள்ளது என்பதை அம்பாறை அரசாங்க அதிபரை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடிய போது இதுவரை அமைச்சிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை என்று அரசாங்க அதிபர் தெரிவித்ததாக தேசிய காங்கிரசின் இறக்காமம் பிரதேச பிரதானி சட்டத்தரணி கே.எல். சமீம் தெரிவித்தார்.

நாட்டில் தினமும் கொரோனா மரணங்கள் கூடிவரும் இன்றைய சூழ்நிலையில் ஓட்டமாவடி மஜ்மா நகரில் ஒதுக்கப்பட்ட இடமும் போதாமையாக உள்ளதனால் அவசரமாக இன்னும் பல இடங்களை கொரோனா தொற்றுடன் மரணிப்பவர்களுக்காக ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இறக்காமம் கொரோனா மையவாடி தொடர்பான தற்போதய உத்தியோகபூர்வ தகவலைப் பெற அம்பாறை அரசாங்க அதிபரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், அம்பாறை அரசாங்க அதிபர் இது தொடர்பிலான தகவலை பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் எடுத்து கூறுமாறு என்னை கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் ஊடாக தகவலை எத்தி வைத்துள்ளேன். இவ்விடயம் தொடர்பில் பிரதேச அரசியல்வாதிகள் சகலரும் கரிசனை செலுத்தி உடனடியாக மாற்று இடங்கள் பலதையும் அடையாளப்படுத்த வேண்டிய தேவை இன்றைய கொரோனா அலையின் காரணமாக எழுந்துள்ளதாக அவர் இதன் போது தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.