மாளிகைக்காடு, சாய்ந்தமருது பிரதேசத்தில் மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம்!

(எஸ்.அஷ்ரப்கான்)

மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

மாளிகைக்காடு- சாய்ந்தமருது எல்லை வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்களான 13-15 வயதுக்குட்பட்ட 08 மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது மாலை 04.20 மணி அளவில் அதில் இருவரை கடலலை உள்ளிழுத்து சென்றுவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடலில் இழுத்து காணாமல் போன மாணவர்களை சம்பவத்தை கேள்வியுற்ற நிமிடம் முதல் மீனவர்களும், பொதுமக்களும் இயந்திர படகுகளை கொண்டு தேடியும் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனைய ஆறு மாணவர்களும் அவர்கள் பயணித்த துவிச்சக்கர வண்டிகளும் நிந்தவூர் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் மேலதிக விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.