கிழக்கில் சாதாரண தர மாணவர்களுக்கான  மாகாணமட்ட முன்னோடிப் பரீட்சை ஆரம்பம்!

 

( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் கபொத சாதாரண தர பரீட்சைக்கு எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான மாகாணமட்ட முன்னோடி கணிப்பீடு பரீட்சை (திங்கட்கிழமை) ஆரம்பமானது.

கிழக்கு  மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களிலும் இந்த முன்னோடி கணிப்பீடுப் பரீட்சை  நேற்று (திங்கட்கிழமை) தொடக்கம்  மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வரை நடைபெற இருக்கின்றது என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

அவர் வலயங்களுக்கு வழங்கிய அறிவுறுத்தலில் –

இலங்கையில் க.பொ.த. சாதாரண தரத்தைப் பொறுத்தவரை நான்காவது இடத்தில் இருந்த கிழக்கு மாகாணம்  ஆறாம் இடத்தை அடைந்தது. அதாவது தசம் நான்கு புள்ளிகளால் இரண்டு நிலைகள் பின் தள்ள வேண்டிய ஏற்பட்டது .இதற்கு பொருளாதார நெருக்கடி முதல் பல காரணங்களைக் கூறலாம் .

இருந்த பொழுதிலும் தற்போது அவை ஓரளவு தணிந்துள்ள நிலையில் எமது மாணவர்களை சிறந்த அடைவுமட்டத்தை அடைய மாகாண மட்டத்தில் முன்னோடி பரிட்சையை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

இப் பரிட்சை உரிய கண்காணிப்போடு  முறைப்படி நடத்தப்பட்டு அந்தந்த வலயங்களில் குழு நிலை மதிப்பீடும் மேற்கொள்ளப்பட்டு மார்ச் மாதம் ஏழாம் திகதிக்கிடையில் நிறைவு செய்யப்பட்டு ஒன்பதாம் திகதிக்கு இடையில் மாகாணத்துக்கு சகல முடிவுகளும் வந்து சேர வேண்டும் .

இதனை அடிப்படையாக வைத்து எதிர்வரும் குறுகிய காலத்துக்குள் பரிகார வேலை திட்டம், மேலதிக வகுப்பு, விசேட வேலைத்திட்டம் என்பதனை இந்த மாணவர்களுக்காக மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.

எனவே, இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுமாறு வேண்டுகிறேன். – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.