முலைத்தீவு – தேராவில் குளத்து மேலதிக நீரினால் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான தீர்வு பணிகள்

தேராவில் குளத்து மேலதிக நீரால் பாதிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தீர்வு வழங்கும் விதமாக முல்லைத்தீவில் வெள்ள நீர் முகாமைத்துவ செயற்றிட்டம் மாவட்ட அரசாங்க அதிபரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேராவில் குளத்தின் மேலதிக நீரினை வெளியேற்றுவதற்கான செயற்றிட்டம் லைக்கா ஞானம் அறக்கட்டளை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பங்களிப்புடன் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தேராவில் குளத்து மேலதிக நீரினை வெளியேற்றும் இத்திட்டத்துக்கான பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கனரக இயந்திரம் கொண்டு நீரை வெட்டி அகற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேராவில் குளத்து நீர் நிரம்பி மேலதிக நீரால் குளத்துக்கு அருகில் இருந்த 17 குடும்பங்களும் பாதிக்கப்பட்டு, சுமார் இரண்டு மாதங்களாக இடைத்தங்கல் முகாமில் தங்கிவரும் நிலையில், இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்தன், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் உபதலைவரும் முன்னாள் அரசாங்க அதிபருமான சு.அருமைநாயகம், கமநல சேவை திணைக்கள உதவிப் பணிப்பாளர் பரணிதரன், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சி.கோகுலராஜா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் க.அரங்கன், வனவள திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், பொதுமக்கள் என பலர்  கலந்துகொண்டனர்.