25 லட்சம் சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு அமையவேண்டும்! வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் எதிர்பார்ப்பு இது

வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு 25 லட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலக்கை அடைய முடியும் என வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.

அதன்படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கருத்திற்கொண்டால், உரிய இலக்கை எளிதாக எட்ட முடியும் என்பது தெளிவாகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி கிராண்ட் கண்டியன் ஹோட்டலில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் அவர் கூறுகையில் –

கடந்த வருடம் 15 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தனர். அந்த வருடம் ஜனவரியில் மட்டும் ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

இவ்வருடம் ஜனவரியில் 2 லட்சத்து பத்தாயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள்  வருகை தந்துள்ளனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்த கிரீஸ், ஜிம்பாப்வே, அர்ஜென்டினா போன்ற நாடுகள் அந்த நிலையிலிருந்து மீள்வதற்கு ஒரு தசாப்தத்துக்கும் மேலாக எடுத்துக்கொண்ட போதிலும், இலங்கை இரண்டு வருடங்களில் உரிய இலக்குகளை நெருங்கியது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆகவே, இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவமும் திட்டங்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளன.

உலகப் பொருளாதாரம் 86 ஆயிரம் பில்லியனாக இருக்கும் வேளையில் இலங்கையின் பொருளாதாரம் 74 பில்லியன் என்ற மிகச் சிறிய பெறுமதியில் இருக்கிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் வர்த்தக உடன்படிக்கைகள் மூலம் பாரிய சந்தையை கட்டியெழுப்புவது அவசியமானது.

மேலும், சீனா, இந்தியா, பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகள் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான முயற்சியின் பலனாக இன்று வேகமாக முன்னேறி வருகின்றன.

நாட்டினது பாரிய சரிவுகள் காரணமாக 13 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு சிலிண்டருக்காக மூன்று முதல் நான்கு நாள்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு வருட குறுகிய காலத்தில் 24 மணித்தியால தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்கி, அனைத்து வரிசைகளையும் களைந்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தினார்.

ஆகவே, தொடர்ந்து இன்னும் சில வருடங்கள்  அவரை ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

நாடு கட்டம் கட்டமாக முன்னேறிக்கொண்டு வரும் இந்நிலையில், இந்த ஆட்சிக்குப்  பதிலாக வேறொரு ஆட்சியை ஏற்படுத்த எவரேனும் முனைந்தால் தற்போதைய நிலையிலிருந்து நாட்டை இன்னும் முன்னேற்றகரமான நிலைமைக்கு முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பொருளாதாரத்  திட்டங்களை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இந்த நாட்டின் அரச சேவை நாட்டுக்கு பெரும் சுமையாக காணப்படுகிறது. இதற்கு பல சீர்திருத்தங்கள் தேவை எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.எச்.எம்.ஹலீம், கண்டி முன்னாள் நகர பிதா  கேசர சேனாநாயக்க, கண்டி முஸ்லிம் வர்த்தக சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.