மக்கள் பிரதிநிதிகளும்,கட்சிப் பிரமுகர்களும் மக்கள் உணர்வறிந்து செயற்பட வேண்டும்!  உதுமாலெப்பை அறிவுறுத்து

கே எ ஹமீட்

மக்கள் பிரதிநிதிகளும், கட்சிப் பிரமுகர்களும் கட்சிக் கட்டமைப்பை செயற்படுத்தி மக்களின் காலடிக்குச் சென்று கட்சி தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், மக்களின் உணர்வுகளையும் அறிந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும்,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை

நிந்தவூர் 07 ஆம் கிராம சேவகர் பிரிவுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிளை புனரமைப்புக்கூட்டம் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அதிஉயர் பீட உறுப்பினர் எம்.ரீ.சப்றாஸ் தலைமையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு  தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில் –

நாம் எவ்வளவு அதிகாரங்களில் இருந்தாலும், பாரிய அபிவிருத்திப் பணிகளை செய்தாலும் மக்கள் சந்திப்புக்களை அடிக்கடி ஏற்படுத்தி நமது மக்களின் மன உணர்வுகளை அறிவதுடன், நமது கட்சி செயற்பாடுகள் பற்றியும் மக்களுக்கு கிராம மட்டத்தில் விளங்கப்படுத்த வேண்டும்.

மறைந்த பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய கால கட்டத்தில் அவரிடம் ஆட்சி,அதிகாரங்கள்,அபிவிருத்திகள் எவையும் இருக்கவில்லை. அரசியல் ரீதியில் அச்சமற்ற சமூகமாக முஸ்லிம் சமூகத்தை உருவாக்கி கொள்கைரீதியான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.
நமது மக்கள் எல்லோரும் நாடாளுமன்றத்தில் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் நமது சமூகம் தொடர்பான என்ன பேசியுள்ளார் என்பதை நாடாளுமன்றத்தில் இன்று என்ற நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கேட்டனர்.

தலைவர் அஷ்ரப் அவர்களின் சமூகம் தொடர்பான தைரியமான குரல் தான் எமது சமூகத்தின் அரசியல் விடுதலைக்கு மூலனதமாக அமைந்தது என்பது தான் யதார்த்தமாகும்.

நாம் எல்லோரும் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை கிராம மட்டத்தில் இருந்து பலப்படுத்தும் செயற்பாடுகளில் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும்.

கட்சியையும், தலைமையையும், நமது மக்களையும் விசுவாசிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். கட்சியை பலப்படுத்திய பின் தேர்தல் நடைபெறும் போது யார் யார் உயிருடன் இருப்போம் என்பது தெரியாத உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இறைவனை நாடியவர்கள் நாடாளுமன்றம், மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர் ஆகலாம் என்ற நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும். கட்சிக் கிளைகள் புனரமைப்பு செயற்பாடுகள் நிறைவு பெற்றதும் இளைஞர் கிளைகளும், மகளிர் கிளைகளும் புனரமைப்பு செய்யப்பட்டு இளைஞர்கள் கிராம மட்டத்தில் ஒற்றிணைந்து கட்சி தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்களை ஏற்பாடு செய்து நாளைய தலைவர்களான இளைஞர்களுக்கு எமது கட்சி செயற்பாடுகளில் இடம் கொடுக்க வேண்டும். இப்போதிருந்தே எதிர்காலத்தில் எமது கட்சியை வழி நடத்தக்கூடியவர்களை இனம் கண்டு முன்னுரிமை வழங்க வேண்டும்.

எமது கட்சியின் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் (எம்.பி) அவர்களும் நமது கட்சியை எதிர்காலத்தில் வழி நடத்தக்கூடியவர்களை இப்போதிருந்தே அடையாளம் கண்டு நமது கட்சியை எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டிய பாரிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உள்ளது என்பதை பல பொதுக்கூட்டங்களில் பகிரங்கமாகவே தெரிவித்து முஸ்லிம் காங்கிரஸைப் பலப்படுத்தி நாம் எல்லோரும் ஒற்றுமையாக செயற்படுவதற்கான அழைப்புக்களை விடுத்து வருகின்றோம்.

இந்த நிலைமையில் இளைஞர்களையும், மகளிர்களையும் கிராம மட்டத்தில் அணிதிரட்டி நமது கட்சியைப் பலப்படுத்தும் செயற்பாடுகளில் விசுவாசத்துடன் செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். (05)