புலனுறுப்புகளால் உலக சாதனை படைத்த பர்ஷானுக்கு முஷாரப் எம்.பிக்கு கௌரவம்

பாறுக் ஷிஹான்

புலனுறுப்புகளால் மெய்சிலிர்க்கும் சாகசம் புரிந்து சர்வதேச சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதை சேர்ந்த எம். எஸ். எம். பர்சான் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப்பால் அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை தனியார் விருந்தினர் விடுதியில் வைத்து  கௌரவிக்கப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்ததாக உலகின் 26 நாடுகளில் வியாபித்திருக்கும் சர்வதேச சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் முன்னிலையில் எம்.எஸ்.எம். பர்சானினால் புலனுறுப்புகளால் புரியப்பட்ட சாதனைகளை உலக சாதனையாளர்களை பதியும் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார். இவர் கண், காது, மூக்கு , வாய் ஆகிய புலனுறுப்புகளால்  அபார சாதனையை மேற்கொண்டு பார்வையாளர்களை வியப்பில்  ஆழ்த்துவதுடன் காதினால் பலூனை ஊதி உடைத்தல் , கண்களினால் இரும்பு கம்பியை வளைத்தல் , பல்லால் 5.7 கிலோ கிறாம் பாரத்தை சங்கிளிகளின் உதவியுடன் உயர்த்துதல் ,குளிர்பானத்தை முக்குத்துவாரத்தினூடாக அருந்துதல் , மூக்கு துவாரத்தினூடாக வயரை செலுத்தி வாயினூடாக எடுத்து மின் குமிழை எரியச் செய்தல், பல்லினால் தேங்காய் உரித்தல் போன்ற செயற்பாடுகளை 12 நிமிடத்தில் மேற்கொண்டு சர்வதேச சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்

சர்வதேசம் சென்று சோழன் உலக சாதனை புத்தகத்தில் பெயரை பதித்த சாய்ந்தமருது பர்ஷான் இச் சாதனை மூலம் தாய் நாட்டுக்கும் , பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்ததையிட்டு பாராளுமன்ற உறுப்பினருடன் கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர்  எம்.ஐ.ரனூஸ், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எச்.அப்துல் றஹீம், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளர் ஜாஹிர், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எஸ்.முபாரக், சதக்கத்துல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரதேச இணைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும்  கௌரவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.