கல்முனையில் தற்காலிக காணி அனுமதிப்பத்திரம் உள்ள வியாபாரிகளுக்கு நிரந்தர காணி உறுதிகள் வழங்க முடிவு! ஹரீஸ் எம்.பியின் ஏற்பாட்டில்

நூருல் ஹூதா உமர்

கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள தற்காலிக காணி அனுமதிப்பத்திரம் (பெர்மிட்) உள்ள கடை சொந்தக்காரர்களுக்கு நிரந்தர காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கும் விதமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் புதன்கிழமை காணி ஆணையாளர் நாயகத்தை சந்தித்து கலந்துரையாடிய போது ஜனாதிபதியின் ‘உறுமய’ திட்டத்தின் கீழ் நிரந்தரமான காணி உறுதிகளை வழங்க காணி ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் மத்தியில் மிக நீண்டகாலமாக நிலவிவரும் இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கடந்த வாரம் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதி செயலாளர் சமன் எக்கநாயக்கவை சந்தித்து பேசியதை அடுத்து அவர்கள் வழங்கிய துரித ஒத்துழைப்பினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்கள் நன்மையடைய உள்ளனர்