வவுனியாவில் பாடசாலை ஒன்றிலிருந்து வெடிக்காத மோட்டார் குண்டுகள் மீட்பு!

வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டர் குண்டுகள் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளன என மடுகந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்புரவு செய்த போது குறித்த குழிக்குள் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பாடசாலை நிர்வாகத்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப் பகுதியில் இருந்து 7 மோட்டார் குண்டுகளை மீட்டனர்.

மீட்கப்பட்ட மோட்டர் குண்டுகளை வவுனியா நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.