தொல்லியல் திணைக்களம் பொய்யான அறிக்கை: மேன் முறையீடு செய்யப்படும் என்கிறார் சுகாஸ்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பாக தொல்லியல் திணைக்களம் பொய்யான அறிக்கை வழங்கியுள்ளது.  நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஆலயம் சார்பில் முன்னிலையானசட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார்.

இது தெர்டர்பில் அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த போது –

வெடுக்குநாறி ஆலயத்தில் கைதுசெய்யப்பட்ட எட்டு  அப்பாவி சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு மன்றிற்கு அழைக்கப்பட்டது. காலையில் இருந்து பெரும் சட்டப் போரட்டமாகவே அது அமைந்திருந்தது. இருப்பினும் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த விடயம் தொடர்பாக நாம் மேன்முறையீடு செய்யவுள்ளோம்.

அந்த எட்டுபேர் மீதும் எந்தவிதமான தவறும் கிடையாது. அவர்களுக்கு நீதி கிடைக்கின்றவரை நாம் தொடர்ச்சியாகப் போராடுவோம்.  இந்த சந்தேக நபர்கள் தொல்லியல் சின்னங்களிற்கு சேதத்தை ஏற்படுத்தியதாக தொல்லியல் திணைக்களத்தால் உண்மைக்கு புறம்பான ஒரு பொய்யான அறிக்கையை நீதிமன்றிலே தாக்கல் செய்துள்ளது.

உண்மையில் அவ்வாறான எத்தகைய சேதங்களும் ஏற்பட்டிருக்கவில்லை. அதனை நாம் மேன்முறையீட்டிலும் விளக்கத்தின் போதும் நிருபிப்போம். – என்றார்.