பலத்த பாதுகாப்புடன் சாட்சியமளிக்க வந்த நீதிபதி இளஞ்செழியன்

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு, இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்தார்.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட குறித்த வழக்கு விசாரணையில், மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனும், காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும் சாட்சியமளித்தனர்.

வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் விசேட அரச சட்டவாதி நாகரத்தினம் நிசாந்தும் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி பிரதீபன் சர்மினியும் முன்னிலையாகியிருந்தனர்.

இதேவேளை குறித்த வழக்கு விசாரணை தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.