வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிக்கு விசேட நடவடிக்கை

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதாக தெரிவித்து மோசடியான முறையில் பணம் சம்பாதிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று பணிப்புரை விடுத்தார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதாக பொய்யாக தெரிவித்து பணம் சம்பாதிக்கப்படுவதை   தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குகிறோம் என்ற போர்வையில் சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பது தொடர்பாக முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கு தேவையான வசதிகளை வழங்குமாறு SLBFE இன் பதவி நிலை உயர் அதிகாரிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, அநுராதபுரத்தை  அண்மித்த பகுதியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் பௌத்த பிக்கு ஒருவரும் வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள புலனாய்வுக் குழுவுடனான கலந்துரையாடலின் படி, இவ்வாறான சம்பவத்தை யாராவது எதிர்கொண்டால், முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு SLBFE இன் முறைப்பாடு பிரிவில் முறைப்பாடு செய்யுமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தை பெறுவதற்கு உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தினமும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதாக பொய்யான வாக்குறுதிகளின் மூலம் பணம் பெறப்படுவது குறித்து எங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கின்றன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த விவகாரங்கள் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக விரிவான விசாரணைக் குழுவைக் அமைத்துள்ளோம்.

அண்மையில் இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான அதிகளவிலான  முறைப்பாடுகளை பெற்றோம். அநுராதபுரத்திற்கு அண்மித்த ஒரு குறிப்பிட்ட பன்சலைக்கு அண்ணளவாக அறுநூறு பேர் அழைத்து வரப்பட்டதாகவும், அதற்கு அந்த பன்சல பிரதமகுருவின் தலையீடு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், பொலிஸ் துறையைச் சேர்ந்தவர் என கூறி மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்காக  பணம் பெற்றுள்ளனர்.

தேரரின் பெயரையோ பொலிஸ் நிலையத்தையோ அல்லது பிரதேசத்தையோ நாங்கள் வெளியிடுவதில்லை. எவ்வாறாயினும், யாராவது இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டிருந்தால் அல்லது இந்த சூழ்நிலையில் யாருக்காவது பணம் கொடுத்திருந்தால், முறைப்பாடுகளை  செய்ய உடனடியாக SLBFE தொடர்பு கொள்ளவும்.

அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்பைப் பெறுவதற்காக யாராவது பணம் செலுத்தியிருந்தால், உடனடியாக SLBFE க்கு வந்து முறைப்பாடுகளை எங்கள் புலனாய்வுத் பிரிவினரிடம் வழங்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். யாரேனும் அவ்வாறு பணம் செலுத்தியிருந்தால், தயவு செய்து விரைத்து  முறைப்பாடு செய்யும். குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இந்த முறைப்பாடுகள்  அவசியம்.

இந்த விடயம் தொடர்பில் அனுராதபுரம் தொடர்பான பல்வேறு மூலங்களிலிருந்தும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும், எங்களுக்கு இதுவரை முறையான முறைப்பாடுகள்  வரவில்லை. எனவே, முறையான முறைப்பாடுகளை உடனுக்குடன் வழங்க வேண்டும். நீங்கள் அத்தகைய ஊழலுக்கு ஆளாகியிருந்தால், உங்கள் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், தயவுசெய்து SLBFE-க்கு சென்று முறையீடுங்கள் என தெரிவித்தார்.