SLFP கட்சியில் இருந்து நீக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய விஷேட குழு

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் பல்வேறு  காரணங்களினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை மீள கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தலைமையில் நேற்று இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் ஒன்று அந்தக்கட்சியின் பதில் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்றுக் கூடிய போதே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மகிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.இந்த குழுவிற்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கான பொறுப்பு முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மன்றக்கல்லூரியில் இடம்பெற்றக் கூட்டத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலுக்கு நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.எனினும், நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட தரப்பினர் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.