முன்னாள் அமைச்சர் பௌசிக்கு நீதிமன்ற நோட்டீஸ்

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நெதர்லாந்து அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கிய ஜீப் வண்டியை தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 1 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ​​பிரதிவாதி பௌசி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்திற்கு இன்று வரவில்லை என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.

அதனை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கையையும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி, வழக்கை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் பிரதிவாதியை நீதிமன்றில் ஆஜராகி நோட்டீஸ் வழங்குமாறு உத்தரவிட்டார்.