சீல் வைக்கப்பட்ட சுதந்திரக் கட்சி தலைமையகத்தினுள் நுழைந்த பொலிஸார்

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த சுதந்திரக் கட்சி தலைமையகத்தினுள் பொலிஸார் உள்நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீல் உடைத்து அகற்றிய பின்னரே இன்று காலை பொலிஸார் சுதந்திரக் கட்சித் தலைமையத்தினுள் புகுந்து கட்டடத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துகொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தினுள் இருந்த முக்கியமான ஆவணங்கள் மற்றும் கோப்புகள் காணாமல் ​போய் விட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் மேலதிக விசாரணைகள் நிறைவடையும் வரை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு சீல் வைத்து மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தினுள் விசாரணை தொடர்பான கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக பொலிஸார் உள்நுழைந்துள்ளனர்.

மேலும் குறித்த பிரதேசத்தில் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்காக மேலதிக பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.