மன்னாரில் போதை பொருள் வியாபாரியின் சொத்து முடக்கம்

மன்னாரில் போதை பொருள் விற்பனையுடன் தொடர்பு பட்ட சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்து முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தலைமன்னார் பகுதியை சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் ஒருவருக்கு சொந்தமான இரு வீடுகள்,சொகுசு வாகனம் உள்ளடங்கலாக 9 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மேற்படி நீதிமன்ற அனுமதியுடன் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் இயங்கும் சொத்து முடக்கள் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் அவர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து  இன்று (2) மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் தலைமையில் கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவின் சட்ட விரோத விசாரணை பிரிவு பொலிசாரினால் தற்காலிகமாக இன்றில் இருந்து 7 தினங்களுக்கு சந்தேக நபரின்  கடைதொகுதியுடன் கூடிய வீடு, தலைமன்னார் பகுதியில் உள்ள விசாலமான வீடு மற்றும்  சொகுசு வாகனம் என்பன  முடக்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர் 2002 ஆம் ஆண்டு அரச வீட்டுத்திட்டம் ஒன்றை பெற்று இரண்டு படகுகளை வைத்து சாதாரண வாழ்க்கை  வாழ்ந்து வந்த நிலையில் 2019  ஆம் ஆண்டுக்குப் பின்னர்  பல கோடி சொத்துக்களைச் சேர்த்துள்ளார்  என தெரியவந்துள்ளது.

அதேநேரம் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், உயர் நீதி மன்றத்தின் அனுமதியுடன் சொத்துக்களை அரசுடமையாக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கில் சட்ட விரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை என்பதுடன் இது போன்று சட்ட விரோதமாக சொத்துக்கள் ஈட்டிய பல்வேறு நபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.