இல்மனைற் அகழ்வை நிறுத்த கோரி இராஜங்க அமைச்சர் தலைமையில் எதிர்ப்பு ஊர்வலம்

மட்டக்களப்பு வாகரையில் நில அபகரிப்பை தடுப்போம் நிலத்தை காப்போம் என்ற தொனிப் பொருளில் இராஜங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் மாபெரும் கவனயீர்பு ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த எதிர்ப்பு ஊர்வலம் நேற்று (02) வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து பிரதேச செயலகம் வரையில் இடம்பெற்றது.

முற்போக்கு தமிழர் கழக கட்சி மற்றும் வாகரை பொது அமைப்புக்கள் ஒன்று இணைந்து வாகரையில் நில அபகரிப்பை இல்மனைற் அகழ்வு போன்றவற்றை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

அதனை தொடர்ந்து அங்கு ஒன்றினைந்த மக்கள் நில அபகரிப்பை நிறுத்து, இல்மனைற் அகழ்வை நிறுத்து, இறால் பண்ணை அமைப்பை நிறுத்து. போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்து ஆர்பாட்ட ஊர்வலமாக சுமார் 2 கிலோ மீற்றர் துரம் கொண்ட பிரதேச செயலகம் வரை சென்று கோஷங்கள் எழுப்பிய பின்னர் உதவி பிரதேச செயலாளரிடம் இராஜாங்க அமைச்சர் மகஜர் ஒன்றை கையளித்த பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து களைந்து சென்றிருந்தனர்.